உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

சோப்பும் நுரையும்!குளியல் என்றவுடனே மனம் இறக்கை கட்டும். காக்கா குளியல் முதல் மகாராஜா குளியல் வரை பலவகை உண்டு. குளியலில் தண்ணீருக்கு அடுத்து சட்டென்று மனதில் வழுக்குவது சோப்பு.வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், விரும்பும் சோப்பை பயன்படுத்தி குளித்தால் தான் சருமம் புதுப்பொலிவு பெறுவதாக நம்பிக்கை ஏற்படுகிறது. உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது. எந்த சோப்பை பயன்படுத்தினால், என்ன மாதிரி மணம் வீசும் என்று பலர் தெரிந்துவைத்திருப்பர். ஆனால் பொங்கும் நுரையின் ரகசியம் தெரிந்திருக்காது.சோப்பு தயாரிப்பின் மூலப்பொருள், ஒருவகை உப்பு. அதில், காரத்தன்மையுள்ள ஆல்கலைன் மற்றும் தாவர கொழுப்பை சரி விகிதத்தில் சேர்க்கும்போது, குளியல் சோப்பு தயாராகிறது. நிறத்திற்கும், மணத்திற்கும் சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நுரைக்கான ரசாயனமும் கலக்கப்படுகிறது.தேர்ந்தெடுக்கும் சோப்பில் சருமத்திற்கு ஏற்ற அளவில் காரத்தன்மை, அமிலத்தன்மை உள்ளதா என, கவனத்தில் கொள்ளவேண்டும். கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு, முறையான கணக்கில் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் தோலில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை சாறு கலந்த சோப்பு நல்லது. வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை,ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் கலந்த எண்ணெய், அவகோடா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்பு சிறந்தது. சோப்பின் அழகிய நிறங்கள், குறிப்பிட்ட ரசாயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகின்றன.சோப்பின் தரத்தை குறிப்பிட, டி.எப்.எம்., என்ற குறியீடு பயன்படுகிறது. இது, 'டோட்டல் பேட்டி மேட்டர்' என்ற ஆங்கில தொடரின் சுருக்கம். கொழுப்பின் தரம் மற்றம் அளவீடு பற்றிய விவரம் அடங்கியது. முதல் தர சோப்பு என்பது, 75 சதவீதத்திற்கு அதிக டி.எப்.எம்., கொண்டதாகும். நடுத்தரத்தில், 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம்., இருக்கும். அறிமுகமாகும் சோப்புகள் அனைத்தையும் சிலர் வரிசையாக பயன்படுத்துவர்; அது தவறு. சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, சோப்பு வாங்கும்போது, டி.எப்.எம்., அளவை கவனியுங்கள். வீரியம் நிறைந்த ரசாயனங்களான, சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பை பெரியவர்கள் பயன்படுத்துவது தவறு. அதை பன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். பிறந்தவுடன் குழந்தைகளுக்கு சருமத்தில் அதிகம் துளைகள் இருக்காது. அதற்கு ஏற்ப வீரியம் குறைந்த ரசாயனப்பொருட்களைக் கொண்டே சோப்பு தயாரிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும்; அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி, குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பில் இல்லை. எனவே, 3 வயதுக்கு மேற்பட்டவர்கள், அது போன்ற சோப்பு பயன்படுத்த வேண்டாம்.ஓர் எச்சரிக்கை!மூலிகை சோப்பு என்று விளம்பரம் செய்வதிலும் ரசாயன மூலப்பொருட்களை சேர்ப்பர். இயற்கை பொருட்களால் ஆன சோப்புகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும்போது தரத்தை உறுதி செய்து கொள்ளவும். தினமும் இருமுறை மட்டுமே சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி சோப்பு போட்டால், சருமம் வறண்டு போகும்.திரவ சோப்பு வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் ரசாயனத்தின் வீரியம் குறைவு. சாதாரண சோப்பு உடலுக்கு ஒத்து கொள்ளாதவர்கள், சரும பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனைப்படி, சோப்பு பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே நறுமணத்தை மட்டுமே விரும்பி சோப்பு வாங்குவதை தவிர்க்க வேண்டும். குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பில் இவ்வளவு விஷயங்களா! இனி, சிந்தித்து செயல்படுங்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !