பக்குவம்!
திருச்சி, சாவித்ரி வித்யாசாலா பெண்கள் பள்ளியில், 1958ல், 9ம் வகுப்பு படித்த போது, 'த்ரோ பால்' விளையாட்டு குழுவில் இடம் பெற்றிருந்தேன். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றிருந்தோம். உடற்கல்வி ஆசிரியை நல்லம்மா, 'போட்டியில் பங்கேற்க சென்னை செல்ல வேண்டும்...' என்றார். 'அவ்வளவு துாரம் எல்லாம் போக வேண்டாம்...' என மறுத்து விட்டனர் பெற்றோர். ஏமாற்றத்துடன், ஆசிரியையிடம் நடந்ததை தெரிவித்தேன். உடனே, என் வீட்டிற்கு வந்து, 'குழுவில், 16 மாணவியரை அழைத்து செல்கிறேன். உங்கள் மகளை பத்திரமாக பார்த்து கொள்ள மாட்டேனா... கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீங்க...' என, பக்குவமாக எடுத்து கூறி, சம்மதம் பெற்றார். போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்றோம். வெள்ளி பதக்கம் கிடைத்தது.தற்போது, என் வயது, 78; அக்கம் பக்கத்தவருக்கு யோகக்கலையை சேவை அடிப்படையில் கற்றுத்தருகிறேன். அன்று பதக்கம் பெறுவதற்கு உதவியாக இருந்த ஆசிரியையை பெருமையுடன் மனதில் பதித்துள்ளேன்.- பி.சூடாமணி, சென்னை.தொடர்புக்கு: 99622 86067