உள்ளூர் செய்திகள்

பொது ஒழுக்கம்!

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர், எம்.பி.பி.எஸ்., செந்தில்குமார் நடுநிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி! தலைமை ஆசிரியர் ஆசிர்வாதம் நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; அவரை கண்டாலே மாணவர்கள் அஞ்சுவர். மிகவும் கண்டிப்புடன் இருப்பார்; ஒழுக்கத்திற்கு முன்னுரிமை தருவார்.ஒரு நாள், இரண்டாவது பாடவேளையில் விளையாட்டு ஆசிரியர் வராததால், தலைமை ஆசிரியரே வந்தார். விளையாட்டு மைதானத்திற்கு எங்களை அனுப்பி கவனித்தார். மைதான ஓரத்தில் சிலர் சிறுநீர் கழிப்பதை கண்டு, அழைத்து விசாரித்தார்; அனைவரும் அமைதி காத்தோம்.ஐந்து பேரை, பெயர் குறிப்பிட்டு அழைத்தார்; அதில் நானும் இருந்தேன். கன்னத்தில், 'பளார்' என அறைந்து அறிவுரைத்தார். பொது இடங்களில் அசுத்தம் செய்வது தவறு என்பதை உணர்ந்தேன். எச்சரிக்கையுடன் வாழ்வில் அதை தவறாது கடைப்பிடித்து வருகிறேன்.இப்போது என் வயது 69; பொது ஒழுக்கத்தை கற்றுத்தந்த அந்த தலைமை ஆசிரியரை இன்றும் மனதில் கொண்டுள்ளேன். - ஆர்.சுப்பு, சிவகாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !