உள்ளூர் செய்திகள்

ரத்த தானம்!

ஆரோக்கியமாக வாழ, மனித உடலுக்கு குறிப்பிட்ட அளவு ரத்தம் தேவை. விபத்து, காயம் போன்றவற்றால் ரத்தம் வீணாகும். சிகிச்சையின் போது, புதிய ரத்தம் தேவைப்படும். இதற்கு ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்யும் முன், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பல உள்ளன. அது பற்றி பார்க்கலாம்...ஆரோக்கியமாக இருப்போர் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும். தானம் செய்வதற்கு, இரண்டு மணி நேரம் முன், மூன்று டம்ளர் தண்ணீர் குடிக்கவும். உடலில் நீர்சத்து இல்லாவிட்டால், ரத்த தானத்தை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து தேவை. எந்த வடிவத்தில் ரத்த இழப்பு ஏற்பட்டாலும், தானம் செய்தாலும், உடலில் இரும்புச்சத்து குறையும். இதனால், மூளை மற்றும் முக்கிய உறுப்புகள் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும். ரத்த தானம் செய்ய விரும்புவோர், சத்துள்ள உணவுகளை தவறாது எடுத்துக் கொள்ள வேண்டும். மீன், கீரை, பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி, பச்சைப் பட்டாணி, கொண்டைக் கடலை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்களை சாப்பிடலாம். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். சுத்தமான காற்றை சுவாசித்து, சூரிய ஒளியில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை தான் ரத்த தானம் செய்ய தகுதியை தரும்.- வ.முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !