தெர்மா மீட்டர்!
வெப்பத்தை அளக்கும் கருவி, 16ம் நுாற்றாண்டின் இறுதியில் கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்று பெயர் கொண்ட இதில், முதலில் காற்று பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றி சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின் இதன் திறனை அதிகரிக்க, காற்றிற்கு பதில் ஆல்கஹால் உபயோகிக்கப்பட்டது. உடல் வெப்பத்தை கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர், சாங்டோரியல் என்பவர். அவரது தெர்மாமீட்டர் , நீண்ட நெளிவுள்ள குழாய் வடிவில் இருந்தது. அதன் மேல்முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ்; மறுமுனை திறந்திருக்கும். அதன் குமிழை நோயாளி வாயில் வைத்துக் கொள்ள, மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும். கு ழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடையும். அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்து குளிர வைத்தால், அதிலுள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் நீர் ஏறுகிறதோ, அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு. தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது. ஆல்கஹால் தெர்மாமீட்டர் இப்போதும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் எனும் பிரெஞ்சுக்காரர், 1731ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பின், ஸ்வீடனை சேர்ந்த ஆண்டர்ஸ் செல்ஷியஸ் எனும் வானியலார், இதில் சென்டிகிரேட் முறையை முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை - 0 டிகிரி; கொதிநிலை - 100 டிகிரி செ.கி., தெர்மாமீட்டரில், 1714ம் ஆண்டில் முதல் முதலில் பாதரசத்தை பயன்படுத்தியவர் ஜெர்மன் விஞ்ஞானி டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட். இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு, பாரன்ஹீட் என்று, இவரது பெயரே சூட்டப்பட்டது. இந்த அளவையின் படி, தண்ணீரின் உறைநிலை - 32 டிகிரி பாரன்ஹீட்; கொதிநிலை - 212 டிகிரி பாரன்ஹீட். பாதரசத்திற்கு மிக அதிக கொதி நிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகிக்கின்றனர். இதை விட அதிக வெப்ப நிலையை அளக்க உதவும் தெர்மாமீட்டர் களில், காலியம் என்ற உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர். -- வி.சுரேஷ்