உள்ளூர் செய்திகள்

புத்திசாலி புவனா

பெற்றோருக்கு ஒரே மகள் புவனா. மிகவும் செல்லமாக வளர்த்தனர். எது கேட்டாலும் உடனே கிடைத்தது. சுட்டித்தனம் செய்வதில் கில்லாடியாக இருந்தாள்.குடும்பம் வாடகை வீட்டில் வசித்தது. முன்னணிப் பள்ளி ஒன்றில் படித்து, முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள் புவனா. கல்லுாரியில் பொருளாதாரம் படித்து, பட்டதாரி ஆனாள்.ஒருநாள் -திடீர் என சாலை விபத்தில் இறந்தனர் பெற்றோர். யாருமற்ற நிலையில் தவித்து நின்றாள். சோகத்துடன் அத்தை வீட்டுக்கு சென்றாள் புவனா. வாழ்க்கை பிடிப்பற்றதாக பட்டது. மிகுந்த மன உளைச்சலில் முடிவு எடுக்க முடியாமல் தவித்தாள். இந்த சந்தர்பத்தில் அவளை சந்தித்தான் ஒரு வாலிபன். அவளை விரும்புவதாக தெரிவித்தான். அந்த பேச்சை நம்பி கரம் பிடித்தாள். ஒரு குழந்தையும் பிறந்தது. மீண்டும் வாழ்வில் புயல் ஏற்பட்டது. குழந்தையுடன் தவிக்க விட்டு பிரிந்தான் வாலிபன்.நிலை குலைந்தாள் புவனா. உள்ளம் எரிமலையாக கொதித்து, கண்ணீர் அருவியாகக் கொட்டியது. வேதனை வாட்ட கடற்கரையை அடைந்தாள். கைக்குழந்தையுடன் கடலில் குதிக்க முயன்றாள். காலில் கண்ணாடி குப்பி இடறியது. கையிலெடுத்து அதன் மூடியைத் திறந்தாள்.குபீரென வெளிப்பட்டது வண்ணமயமான பெரிய பூதம். அவளுக்கு நன்றி கூறி பணிந்து நின்றது. கேட்கும் மூன்று வரங்களைப் பரிசளிப்பதாக வாக்களித்தது. உடன் ஒரு நிபந்தனையும் விதித்தது. எந்த வரம் கேட்டாலும், அவளது கணவருக்கு அது இரட்டிப்பாக கிடைக்கும் என்பது தான் அந்த நிபந்தனை.சிந்தித்தபடி, 2,000 ரூபாய் நோட்டுக்கள் கொண்ட, 50 கட்டுகள் கேட்டாள். பாதுகாப்பாக பையில் வைத்து நீட்டியது பூதம். அதே சமயம் உல்லாச விடுதியிலிருந்த அவள் கணவன் மடியில், 100 கட்டுக்களை குவித்தது. வியப்புடன் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான். இரண்டாவது, வைர அட்டிகை கேட்டாள். இவளுக்கு ஒன்றும், அவளைப் பிரிந்த கணவனுக்கு இரண்டுமாக வழங்கியது பூதம்.துணிவுடன், 'எனக்கு பாதியளவு உயிர் பிரியும் வரை பயமுறுத்து...' என்றாள். சம்மதித்து, அதன்படி செயல்பட்டது பூதம். அதே நேரம் அவள் கணவனின் முழு உயிரையும் பறித்தது.பட்டூஸ்... அறிவைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக நடந்தால் எப்போதும் வெற்றி அடையலாம்.வதுவை சுந்தரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !