அந்துமணி பதில்கள்
* பி.குமாரபாலன், புதுச்சேரி:திருமணம் நடத்த, ஜாதகப் பொருத்தம் அவசியமா?எனக்கு தெரிந்த, 99 வயது பெரியவர் ஒருவர், சமீபத்தில் இறந்தார்... அவருக்கு, இரண்டு மகள், ஐந்து மகன்கள்! யாருக்கும் ஜாதகம் கிடையாது; எல்லாருக்கும் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கின்றனர். கொள்ளு, எள்ளு பேரன், பேத்திகளும் எடுத்தவர்; அவர்களுக்கும் ஜாதகம் குறிக்கவில்லை. அவர்களில், பலருக்கு திருமணமாகி விட்டது!ஜி.குப்புசாமி, சென்னை: நுாலகத்தில், சிலர் துாங்கி வழிகின்றனரே... ஏன்?வீட்டில் மின் விசிறி இல்லாமல் இருக்கலாம்!ஜி.சாந்தி, சென்னை: ஏழைகள் அனுபவிக்கும் சோதனைகளைப் போல், பணக்காரர்களுக்கு வருவதில்லையே!நேர்மையாக நடந்துகொள்ளும், பணம் படைத்தவர்களுக்கு பிரச்னைகள் வருவதில்லை; ஆனால், மிகப்பெரிய பணக்காரர்களாக காட்டிக் கொண்டிருந்த, ஏமாற்று பேர்வழிகள், விஜய் மல்லையா முதல், பிரபல வைர வியாபாரியான மொஹுல் சோக்சி வரை, சோதனைகளுக்கு பயந்து, வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர்; பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி உட்பட சிலர், 'உள்ளே' இருக்கின்றனரே... களி சாப்பிட்டபடி! இன்னும் ஒருவர் கோவை நகரில் தயாராகி கொண்டிருக்கிறாரே...* எஸ்.முருகேசன், திண்டுக்கல்: எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தலைக்கவசம் அணியாமல், அலைபேசியில் பேசியபடி, வாகனம் ஓட்டுகின்றனரே...இவர்கள், முதலில் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை உணராமல் இருக்கின்றனர்! இதைத் தடுக்க ஒரு சட்டம் தேவை... அது, இப்படிப்பட்டோரை, 'கம்பி' எண்ண வைப்பது தான்!வீ.அறிவொளி, புதுச்சேரி:அன்றைய பாண்டிச்சேரிக்கும், இன்றைய புதுச்சேரிக்கும் உள்ள வேறுபாடு என்ன?இன்று, பெயர் மட்டுமே மாற்றம்! அன்று, பிரான்ஸ் நாட்டு, இரு சக்கர மிதி வண்டிகள் மட்டுமே அதிக அளவில் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறுவர். ஆனால், இன்றோ, உங்களுக்கே தெரியுமே... அங்கு வாழ்பவராயிற்றே நீங்கள்!எம்.பாலசுப்ரமணியன், திண்டுக்கல்: சமீபத்தில், உங்களை பிரமிக்க வைத்த நிகழ்வு எது?கடந்த, மே 5 அன்று, என்னை காண, அலுவலகம் வந்திருந்தார், ஒரு பெரியவர். 'தினமலர்' செய்திப் பிரிவில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அவரிடம், இந்த கேள்வியை காட்டி, பதில் கேட்டேன்.மூச்சு விடாமல், பதில் கூறினார்: ஏம்பா, இன்று, நம் நாளிதழை பார்க்கவில்லையா... முதல் பக்கத்தில், மார்ட்டின் என்ற, லாட்டரி அதிபர் வீட்டில், 1,214 கோடி சொத்து ஆவணங்களை, வருமான வரித்துறை கைப்பற்றி உள்ளதே... இன்னும், 5,000 கோடி பிடிபடுமாம்!லாட்டரி தொழிலில், அவர், ஈடுபடும் முன், தினசரி, 15 ரூபாய் சம்பளத்திற்கு, நம் கோவை பதிப்பு தினமலர் நாளிதழை, 30 ஆண்டுகளுக்கு முன், வீடு வீடாக, வினியோகித்துக் கொண்டிருந்தார். இப்படி கூறி, விடை பெற்றார், பெரியவர்.அவர் சென்ற பின், ஒரு பெரிய காகிதத்தை எடுத்து, 1,214 கோடியை எண்ணில் எழுதி பார்த்தேன்... தலை சுற்றல் தான் மிச்சம்; அதன்பின், வேலை செய்ய முடியவில்லை! எனக்கு, அரை நாள் சம்பளம் போச்சு!