உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அன்று விரதமிருந்து, மதியம், 12:00 மணிக்கு மேல், புல் மீல்ஸ் கட்டி விட்டு, இரவு, 'பீச்' மீட்டிங்கில் எங்களோடு கலந்து கொண்ட குப்பண்ணா, 'இப்பல்லாம் விரதமே இருக்க முடியறது இல்லே... காலையில் டிபன் சாப்பிடாம மதியம், 12:00 மணி வரை வெற்று வயிற்றோடு இருந்தேனா... கிள்ளிடுத்து பசி... மதியம் சாப்பிட்டப்பறம் தான் நிதானத்துக்கு வர முடிஞ்சது...' என பேச்சை ஆரம்பித்தார்...'பசித்துப் புசி என்பது நல்ல கொள்கை தானே?' எனக் கிளறி விட்டேன்; எழுத, 'சப்ஜெக்ட்' கிடைக்குமே என்ற ஆவலில்.நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை... தன் பாணியில் தொடங்கி விட்டார் குப்பண்ணா:தமக்குத் தேவையான உணவு எது, சாப்பிட வேண்டிய நேரம் எது என்பதை மனிதனைக் காட்டிலும், எலிகள் நன்னாத் தெரிஞ்சு வச்சுண்டு இருக்காம்... ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சிருக்கா... எது ஊட்டமான சாப்பாடு என்பதைக் கூட எலிகள் நன்னாத் தெரிஞ்சு வச்சுண்டு இருக்காம்...'என் அபிப்ராயப்படி மசால்வடை தான் அதற்கு ரொம்ப நல்ல உணவு...' என்று முணுமுணுத்தேன். தொடர்ந்து ஒன்றும் தெரியாதவன் போல, குப்பண்ணாவிடம், 'டாக்டர்கள், டயட் வெறும் கஞ்சிதான் என்கின்றனரே... அந்த, 'டயட்' தானே ஊட்டமான உணவு என்பது?' என்று கேட்டேன்.'அப்படிப் பொதுவாக சொல்லிட முடியாது...' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்: 'ஒரு குறிப்பிட்ட சமயத்தில், எந்த உணவு ஏற்றதோ, அது தான் டயட்! ஒருவருக்கு, சத்தான உணவு, இன்னொருவருக்கு சத்தானதாயிருக்க முடியாது. நோயாளியாயிருந்தால், அவர் நாக்கிற்கும் பிடிக்க வேண்டும்; உடம்புக்கும் ஏற்க வேண்டும். டயட் நிபுணர்களுக்கு இப்படிப் பல சங்கடங்கள் உண்டு. இதை, இப்போது ஒரு கலையாகச் செய்து விட்டனர். டயட்டீஷியன் - அதாவது, டயட் நிபுணர்கள் எங்கே உணவு வாங்கினால் லாபம் என்பது முதல், எப்படி பரிமாறினால் சிறப்பு என்பது வரையில் விவரமான ஆராய்ச்சி செய்கின்றனர்...''அதாவது, மார்க்கெட்டுக்குப் போய் மலிவாகக் கத்தரிக்காய் வாங்கி வந்தால், அவரும் ஒரு டயட் நிபுணராக்கும்?' என்றார் லென்ஸ் மாமா கிண்டலாக!அதுதான் இல்லை... டயட் நிபுணரின் கண்ணோட்டம் வேறு விதமானது. கால் கிலோ உருளைக் கிழங்கு, இரண்டு ரூபாய் என்று மலிவாய் வாங்கினால், அது லாபமில்லையாம். ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கினாலும், அந்த உருளைக் கிழங்கில் அதிக வைட்டமின் சத்து இருக்க வேண்டுமாம்; அதுதான் அவர் கணக்குப்படி லாபமாம்!'ஒரு டயட்டீஷியன் பற்றி ஒரு துணுக்குப் படித்தேன்...' என்று குப்பண்ணாவை இடைமறித்தேன்...'ஒன்றுமில்லை... உடம்பு என்னவோ போலிருக்கிறது என்று ஒரு டாக்டரிடம் போய் காட்டினாராம் அவர். அவரைப் பார்த்து 'உங்களுக்குக் கோளாறு ஏதுமில்லை; ஆகாரத்தில் ஊட்டம் போதாது; வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வாருங்கள்...' என்றாராம் டாக்டர்...சிரிக்க, 'மகா பெரிய ஹாஸ்யம் என்று நினைப்பு!' என்று கூறிவிட்டு, 'பசி மனதில் ஏற்படுகிற உணர்ச்சியா, உடலில் ஏற்படுகிற வலியா?' என்று கேட்டார் மாமா.'பசி தான் தெரியும்; அதன் பாலிசி தெரியாது...' என்றேன்.குப்பண்ணாவே சொன்னார்: நம் இரைப்பை சுத்தமாகக் காலியாகிற போது, அதன் அடிப்பகுதியில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கிறது. அதனால் தான், பசித் துன்பம் ஏற்படுகிறது. 30 வினாடி நேரம் சுருங்கிய பிறகு, கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்; மறுபடி பசித் துன்பம். ஆனால், மனதுக்கும் முக்கியமான பங்கு உண்டுதான். பசியைக் கவனிக்க ஆரம்பித்தால் தான், ரொம்ப அதிகமாக இருப்பது போல் தோன்றுமாம்; கவனிக்காமலிருந்தால் அவ்வளவு கடுமையாக இருக்காதாம்...'கவனிக்கவும் ஆரம்பித்து, சாப்பாடும் கிடைக்காவிட்டால், இடுப்பில் ஈரத் துணியைச் சுற்றி கொள்ள வேண்டியதுதான்...' என்றேன்.அது விளையாட்டல்ல; உண்மையிலேயே பயனானது தான்! என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... இரைப்பையின் தசைகள் கொஞ்சம், கொஞ்சமாகச் சுருங்குவதற்கு இடங்கொடுக்காமல், இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக் கொண்டால், கால் மணி நேரத்துக்குப் பசி தோன்றாது என்று கணக்கே செய்திருக்கின்றனர். ஆனால், ஈரத் துணியை ஏன் முக்கியமாகச் சொல்கின்றனர் என்று விளங்கவில்லை...'உலர, உலர இன்னும் இறுக்கமாய் அழுத்தும் என்பதாயிருக்கலாம். அந்தக் காலத்தில் சித்திரவதை செய்வராமே, அந்த மாதிரி, பச்சைத் தோலை உடம்பு பூரா போர்த்தி, இறுகத் தைத்து வெயிலில் போட்டு விடுவராம். தோல் உலர்ந்து, உலர்ந்து சுருங்கச் சுருங்க, உடம்பைக் கடிக்கும். வேதனை தாள முடியாது...' என்றேன்.'உடம்பு முழுக்க ஈரத்தோடு இருக்கும் போது, தர்மா மீட்டர் வைத்துப் பார்த்தால், 98 டிகிரி இருக்க வேண்டியதற்குப் பதிலாக, ரொம்பக் குறைவாக இருப்போமோ?' என்று சந்தடி சாக்கில் - சைக்கிள், 'கேப்' பில் தன் சந்தேகத்தைக் கேட்டார் மாமா.நான், 'எனக்கும், மெடிக்கல் சயின்சுக்கும் ரொம்ப தூரம்! கோகுலாஷ்டமி பற்றி, குலாம் காதரிடம் கேட்டது மாதிரி அல்லவா இருக்கிறது...' என்றேன்.இந்த மாதிரிப் பழமொழிகளை சட்டம் போட்டு ஒழிக்க வேண்டும். ஒரு முஸ்லிம் பெரியவர் தான், இந்துக்களின் வேதாந்தமான உபநிடத்தை வெளி உலகத்துக்குப் பரப்பினார் என்றால் நீ நம்புவாயா? என்று கேட்டார் குப்பண்ணா.'நான் ஏன் நம்புகிறேன்? அருமையான கட்டுக்கதை என்று பாராட்டுவேன்...' என்றார் மாமா; நான் மவுனமாக இருந்தேன்...கட்டுமில்லை; கதையுமில்லை... முகலாய மன்னர் அவுரங்க சீப்புக்கு, தாராஷிகோ என்று ஒரு தமயனார் இருந்தார்; இந்து மதத்திலும் பற்று கொண்டவர் அவர். உபநிடதங்களின் சிறப்பைத் தெரிந்து, பாரசீக மொழியில் சிலவற்றை மொழி பெயர்த்தார். 'சிர்-இ-அக்பர்' என்று அதற்கு பெயர் கொடுத்தார். டு பெரான் என்ற மேலை நாட்டு அறிஞர் ஒருவர், அந்த பாரசீக மொழி பெயர்ப்பைப் படித்ததும், தானும் உபநிடதத்தை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்தார். இப்படித்தான் உபநிடதம் வெளிநாடுகளுக்குப் பரவிற்று... என்றபடியே எழுந்து, சிறிது வயிற்றுக்கும் ஈந்து விட்டு வர, வீட்டை நோக்கிக் கிளம்பினார்.மீதி இருந்த இரண்டு, 'குவளை'களை முடிப்பதில் மும்முரமானார் லென்ஸ் மாமா!***அந்த வாசகி, உளவியல் முதுகலை படித்துக் கொண்டிருப்பவர்... அடிக்கடி விமர்சனக் கடிதங்கள் எழுதுவார்; நேரில் சந்தித்தது இல்லை.சமீபத்தில் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து, 'நேரில் சந்திக்க வேண்டும்...' என்றார். வந்தவர், தன் தம்பியை கல்லூரியில் சேர்க்க சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டார்; தேவையான ஏற்பாடுகளைச் செய்து தந்தேன்.அன்று, பேச்சினூடே, 'உளவியல் தொடர்பாக ஏதாவது கூறுங்களேன்...' என்றேன்.'சாதத்தை வைத்து உளவியல் சமாச்சாரம் ஒன்றைக் கூறுகிறேன்... இதை, 'சாத சோதிடம்' என்று வைத்துக் கொள்ளுங்கள்...' என, அவர் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து அமர்ந்திருந்தேன்...'உங்களுக்கு ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறானா? அவனைப் பற்றிய எதிர்காலத்தை அறிய உங்களுக்கு ஆசையா?' என்றார்.நான் பதில் ஏதும் சொல்லாமல், அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்...'இதோ, இப்போதே அறியலாம் அவனது பிற்காலத்தை...' என்றபடியே தொடர்ந்தார்...தேவையானவை: ஒரு தட்டு, கொஞ்சம் சோறு. தட்டிலே சாதத்தைப் பிசைந்து உங்கள் குழந்தை முன் வையுங்கள்; பின்னர் கவனியுங்கள்...சாதத்தால் தட்டிலே பாத்தி கட்டிக் கொள்கிறானா? அப்படியானால், அவன் கூடப் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை செய்து கொள்ள கோர்ட் ஏறுகிற கொள்ளிக்கட்டையாகத் திகழ்வான். அந்த நிலை வராமல், நீங்களே ஒரு ஏற்பாடு செய்து, கண்ணை மூடுங்கள்.அடுத்து, பிசைந்த சோற்றை உருட்டுகிறானா? அதிர்ச்சி அடையாதீர்கள். எதிர்காலத்தில் உங்கள் தலையை உருட்டுவான் அல்லது நாலு பேர் உருட்டும்படியான காரியங்கள் செய்வான்.மூன்றாவதாக, நீங்கள் தட்டைத் தொட்டால் வீலென்று கத்துகிறானா? பிற்காலத்தில் உங்களுக்கு அவன் கையால் சாப்பாடு கிடைக்குமென்பது நிச்சயமில்லை; அப்படியே போட்டாலும், திட்டிக் கொண்டே தான் போடுவான். ஆகவே, உங்கள் எதிர்காலத்துக்கு இப்போதே சேமியுங்கள்.காலை நீட்டிக் கொண்டோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டோ சாப்பிடுகிறானா? குழந்தையின் எதிர்காலத்துக்கு இப்போது இருந்தே சேமிப்பது நல்லது. எதிர்காலத்திலும் குழந்தை இப்படி கால் நீட்டிக் கொண்டு சாப்பிடத்தான் விரும்புவான்; அது, அவ்வளவு சுலபமாக இருக்காதே!சாப்பிடும் போது சோற்றை வாய், மோவாய், கன்னம், மூக்கு நுனியெல்லாம் பூசிக் கொள்கிறானா? மேக்-அப் ஆசை இப்போதே வந்து விட்டது. கோடம்பாக்கம் பக்கமாக உடனே குடியேறி, திரையுலகில் தள்ளப் பாருங்கள், பையனை. அப்புறம் அவன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்.சாதத்தில் கிடக்கும் கல், மண்ணைப் பொறுக்கி எறிகிறானா? நாளைக்கு மாமனாராக வரப் போகிறவர் பாவம்... இவனிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுவார். என்ன சீர் செய்தாலும், 'நொள்ளை' கண்டு பிடிக்கிற மாப்பிள்ளையிடம் அவரது விழி பிதுங்கப் போகிறது.சாதத்தை ஏறெடுத்தும் பாராமல் திரும்பிக் கொள்கிறானா? இவனைப் போல பெரிய அரசியல் தலைவர் யாரும் இருந்ததில்லை என்று பெயரெடுப்பான்! ஆமாம்... குழந்தை இப்போதிருந்தே, உண்ணாவிரதப் பயிற்சி செய்கிறானே, தெரியவில்லையா?'— இப்படிச் சொல்லிச் சிரித்தார்.'உண்மையா?' எனக் கேட்டேன்.'சோதித்துப் பார்த்து சொல்லுங்கள்...' எனக் கூறி சென்று விட்டார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !