உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்புள்ள அம்மா,என் வயது, 37; என் கணவர் வயது, 46. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.என் கணவர் என் மீதும், பிள்ளைகள் மீதும் மிகுந்த பாசம் வைத்து, கண்ணின் மணி போல் பார்த்து கொள்வார்.அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சம்பாதிக்கும் பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்து விடுவார். அதன் பின், இருவருமாக மாதாந்திர பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துவோம். எனக்கு நிறைய நகைகள் வாங்கி கொடுத்துள்ளார்.தனக்காக, எந்த ஒரு ஆடம்பர செலவையும், ஏன் அத்தியாவசிய செலவை கூட செய்யமாட்டார். ஆனால், நானும், பிள்ளைகளும் கேட்பதை எல்லாம் வாங்கி தந்துவிடுவார். எனக்கோ, என் குழந்தைகளுக்கோ உடம்பு சரியில்லாமல் போனால், பக்கத்திலிருந்து மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொள்வார்.அம்மா எங்களது, 'அரேன்ஜ்டு மேரேஜ்!' என் திருமணம், என் விருப்பமில்லாமல் நடந்தது. எனக்கு, தாய் - தந்தையர் இல்லை; சித்தி, சித்தப்பாதான், மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவர் மிகவும் கறுப்பாக, முக லட்சணம் இல்லாமல் இருப்பார்; நான் அழகாக இருப்பேன். இதனாலேயே, எனக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால், இதை சித்தியிடம் சொல்ல தைரியமில்லை. கல்யாணம் முடித்து, 13 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனாலும், எனக்கு இந்த மனக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. என் கணவரிடம், 'உங்களை பிடிக்கவில்லை...' என்று இதுவரை கூறியதில்லை. பல நேரங்களில், அவரது அன்பும், அரவணைப்பும் என் மனக்குறையை அவரிடம் சொல்ல விடுவதில்லை.ஆனால், தெருவில் பெண்கள், அழகான ஆண்களுடன் செல்வதை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கும்.இப்போதெல்லாம், என் கணவர் மிக வயதானவர் போல் தோற்றமளிக்கிறார். அதை பார்க்கும் போது ஆத்திரமாக வரும். அவருடன் வெளியில் செல்லவே பிடிக்கவில்லை. காரணமில்லாமல் சண்டை போடுகிறேன். அழகாக இல்லாவிட்டாலும், நீட்டாக உடை அணியுங்கள் என்று நாசுக்காக சொல்லியும் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.அம்மா... அவர் நல்லவர் என்று எனக்கு தெரியும். ஆனால், அவரது உருவத்தால் எனக்கு, அவர் மீது மிகுந்த வெறுப்பு ஏற்படுகிறது. அவரை விட்டு இந்த ஜென்மம் விலகப்போவதில்லை. ஆனால், இப்படி மனசலிப்புடன், வேதனையை உள்ளேயே அமுக்கி வாழவும், கஷ்டமாக இருக்கிறது. இந்த மனவிரக்தியில் இருந்து மீள மனநல மருத்துவரை அணுகலாமா?என் புத்திக்கு உறைக்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் சொல்லுங்கள் அம்மா.ப்ளீஸ்... அம்மா உங்கள் பதிலுக்காக எல்லா வாரமும், வாரமலர் இதழுக்காக காத்திருக்கிறேன். என் கணவருக்கும் வாரமலர் படிப்பார்; தயவுசெய்து எனக்கு கட்டாயமாக பதில் தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு, உலகத்தில் எந்த ஆண், பெண்ணுக்கு தாங்கள் நினைத்தது மாதிரி வாழ்க்கை துணை அமைந்திருக்கிறது சொல் பார்ப்போம்... கறுப்பு - வெளுப்பு, குண்டு - ஒல்லி, குட்டை - நெட்டை என்று உருவத்தில் மட்டுமல்லாமல், குணத்திலும் எதிர் மறை ஜோடிகளை தான் வாழ்க்கை துணையாக இணைத்து வைக்கிறான் கடவுள். அழகான தம்பதிகள் என்று நீ நினைக்கும் நபர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்... அவர்களில் எத்தனை பேர் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக, ஆனந்தமாக இல்லறம் நடத்துகின்றனர் என்பது புரியும்.மகளே... ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் தான் பரஸ்பரம் ஈர்க்கின்றன. அழகான பெண்களுக்கு, சுமார் மூஞ்சி ஆண்களையும், கறுப்பான ஆண்களுக்கு சிவந்த நிறம் கொண்ட பெண்களையும் பிடிப்பது இயற்கையின் விளையாட்டு.அழகான ஆண்களை படைப்பதை விட, கறுப்பான தனித்துவமான ஆண்களை படைக்க தான் இயற்கை அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறது. உலகில், 700 கோடி முகங்கள் இருந்தாலும், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு மாண்பை பரிசளித்துள்ளான் இறைவன். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கைரேகை டி.என்.ஏ., வியர்வை வாசனை போல, பிரத்யேகமான ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.என் உறவுக்காரரின் மனைவிக்கு நாலு குடை மிளகாயை ஒன்றாய் சேர்த்து வைத்தது போன்று மூக்கு; வாத்து போன்ற வாய்; போதாதற்கு முகத்தில் அம்மைத் தழும்புகள் வேறு. இருந்தாலும் உறவுக்காரர், மனைவியிடம் உள்ள தனித்துவ வசீகரத்தை மோப்பம் பிடித்து, காதலுடன் வாழ்கிறார்.பொதுவாகவே, பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சித்தி - சித்தப்பா பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில், பெரும்பாலும் ஏதோ ஒரு குறை உள்ள ஆண், தான் கணவனாய் அமைவர். அதிர்ஷ்டவசமாக உனக்கு அக அழகில் ஜொலிக்கும் ஆண், கணவனாய் கிடைத்துள்ளர். இது, கடவுள் உனக்கு அளித்த வரம்; அந்த வரத்தை சாபமாக கருதாதே...ஒரு காதல் மனைவியின் கண் கொண்டு, கணவனின் நல்ல குணங்களை வரிசையாக அவதானி. நீயே ஆச்சரியப்படும் அளவுக்கு, ப்ளஸ் பாயின்டுகள் அதிகம் இருக்கும்.நாற்பது வயதுக்கு பின், ஒரு ஆணை வயோதிகம் ஆண்டுக்கு இரட்டிப்பாய் பீடிக்கிறது. ஆகவே, உன் கணவனை, தலைக்கு, 'டை' அடிக்கச் சொல். எந்த உடை உடுத்தினால், எந்த மாதிரி,'ஹேர் ஸ்டைல்' வைத்தால் அழகாக தெரிகிறார் என்று பார். அவர் நிறத்திற்கும், உடல் அமைப்புக்கும் ஏற்ற உடைகளை நீயே வாங்கிக் கொடு. தினமும் முகசவரம் செய்யச் சொல். சிறந்த வாசனை திரவியங்களை பரிசளி. கணவனை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல்மருத்துவரிடம் அழைத்து போ. அவர் கம்பீரமாய் காட்சியளிக்க வேண்டிய அவசியத்தை தினம் பாடம் நடத்து. தாம்பத்தியத்தில் புது யுக்தியை கடைபிடியுங்கள்.நீ அழகானவள் என்கிற உயர்வு மனப்பான்மையை உதிர்த்து, உடலாலும், மனதாலும் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களுக்கு இடையே, உன் கணவன் ஒரு கோகினூர் வைரம் என்று நினை. உண்ட உணவும், உடுத்திய உடையும் எப்போதும் சிறப்பானதே என தெளிவடை.— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !