உள்ளூர் செய்திகள்

அக்கா சுவாமிகள்!

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிகள் ஒருவர், அண்டை நாடான இலங்கையில் உள்ள, யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்த பணக்காரர் ஒருவருக்கு, சுவாமிகளைக் கண்டால் பிடிக்கவில்லை.எப்படியாவது அவரை அசிங்கப்படுத்த தீர்மானித்த, பணக்காரர், 'சுவாமிகளே... தங்களுக்கு அபிஷேகம் செய்து வைக்கலாமா?' என, கேட்டார். அவர் குரலில், கேலியும், விஷமமும் நிறைந்து இருந்தன. 'தாராளமாகச் செய்யலாம். செய்யுங்கள்...' என்றார், சுவாமிகள். பணக்காரருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கச் செய்தார். அப்படியே சோறு வடிக்கப்பட்டது. சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார், பணக்காரர். அதற்குள் சுவாமிகள் ஓரிடத்தில் அமர்ந்து, நிஷ்டை கூடி விட்டார். அவர், நிஷ்டை கூடிய இடத்திற்கு, சோற்று அண்டாக்களைக் கொண்டு போனார், பணக்காரர். அவரது ஆணையை ஏற்று, கொதிக்கக் கொதிக்க அண்டாக்களில் இருந்த சோறு அத்தனையையும், சுவாமிகள் மீது கொட்டி, அவரை மூடி விட்டனர்.ஒரு சில நிமிடங்களில், தன்னை மூடியிருந்த அன்னக் குவியலிலிருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளிப்பட்டார், சுவாமிகள்.அதேசமயம், சுவாமிகளை அசிங்கப்படுத்தும் எண்ணத்தில் தவறான செயலில் ஈடுபட்ட பணக்காரருக்கு, பார்வை பறிபோனது.சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.மன்னித்தார், சுவாமிகள்; ஆனால், பணக்காரருக்கு பார்வை திரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சுவாமிகள், புதுச்சேரிக்குத் திரும்பியபோது, அவருடன் பணக்காரரும் வந்தார்.உதவியாளர் ஒருவரின் துணையோடு, தினமும் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து, வணங்கி வந்தார், பார்வை இழந்த பணக்காரர். ஒருநாள், தன் வழக்கப்படி சுவாமிகளை வணங்க வந்தார், பணக்காரர். அப்போது, 'அதோ முருகப் பெருமான் நிற்கிறார் பார்...' என்றார், சுவாமிகள். 'சுவாமி, பார்வையற்ற நான் எப்படிப் பார்ப்பேன்?' என்றார், பணக்காரர்.'உற்றுப்பார், எல்லாம் தெரியும்...' என்றார், சுவாமிகள்.பணக்காரருக்கு பழையபடியே பார்வை திரும்பியது. கண்ணீர் வழிய, சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், 'என் புத்தியும் நல்வழியில் செல்ல அருள வேண்டும்...' என, வேண்டினார். அவருக்கு ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார், சுவாமிகள்.பெண்கள் அனைவரையும், தன் சகோதரிகளாக எண்ணி, அவர்களை, அக்கா என அழைக்கும் வழக்கம் கொண்ட அந்த சுவாமிகள், 'அக்கா சுவாமிகள்...' என, அழைக்கப்பட்டார்.புதுச்சேரியில் முத்தியால்பேட்டை குதிரைக்குளம் அருகில், 'அக்கா சுவாமி'யின் சமாதி உள்ளது. 19-ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் இவர் வாழ்ந்ததாக, வரலாறு கூறுகிறது. பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !