உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மனைவி என்பவள்!என் நண்பர்கள் மூவரை, தெருவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, நண்பர்களில் ஒருவர், காய்கறி வாங்கி வர, தன் மனைவி சொல்லியதாக குறிப்பிட்டு, புறப்பட்டார். உடனே, மற்றொரு நண்பர், 'இதெல்லாம் லேடீசுங்க வேலைப்பா... உன் மனைவியே செய்யச் சொன்னாலும், 'அது என்னோட வேலை இல்ல'ன்னு சொல்லுவியா... அதை விட்டுட்டு, பொண்டாட்டி சொன்னான்னு மார்க்கெட்டுக்கு போறியே...' என்றார். அருகிலிருந்த மற்றொருவரோ, அவர் சொன்னதை ஆமோதிப்பது போல, 'நானெல்லாம் இதுவரைக்கும் என் மனைவி சொல்லி, எதுவுமே கேட்டதில்லை...' என்று, பெருமைப்பட்டுக் கொண்டார்.ஆமாம்... மனைவின்னா அவ்வளவு இளக்காரமா? செக்சுக்கு மனைவி வேண்டும்; வீட்டு வேலைகள் செய்றதுக்கும், பிறந்த வீட்டை மறந்துட்டு, கணவனுக்கு பணிவிடை செய்யவும் மனைவி வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வேலைக்கு செல்லும் மனைவி என்றால், அவளது சம்பளம், கவருடன் வேண்டும். ஆனால், வீட்டு வேலைகளில், மனைவிக்கு ஒத்தாசை செய்வதும், அவளின் சொல்லை கேட்பதும், கேவலமா போச்சா?ஆணாதிக்கம் கொண்டவர்களே... வீண் ஜம்பம் பேசி, குடும்ப வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்!— சி.ராமநாதன், மேலூர்.ஏழ்மையை ஏளனம் செய்யாதே!நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு. அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.— என்.சாந்தினி, மதுரை.இளம் தாயில் வேதனை!எனக்கு இரு ஆண் குழந்தைகள்; என் கணவர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அனைத்து வெளி வேலைகளையும், நான் தான் கவனிக்க வேண்டும். சமீபத்தில், என் குழந்தைகளுக்கு முடி வெட்ட, அவர்களை சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். சலூனுக்கு வெளியே நின்றிருந்த, நான்கைந்து வாலிபர்கள், 'டேய்... பொம்பளைங்க எந்த வேலைய செய்யணும்ன்ற விவஸ்தையே இல்லையா... எல்லா இடத்துக்கும் வந்துடுறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல, ஆண்கள் செய்யும் முக்கியமான வேலையையும், இவங்களே செய்துடுவாங்க போலிருக்கு...' என்றும், சில சொல்லக் கூடாத வார்த்தைகளையும் பேசி, கேலி செய்தனர். நான் கூனிக் குறுகி, அவமானத்துடன் திரும்பி விட்டேன்.அனைத்து துறையிலும், பெண்கள், அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், இது போன்ற வெட்டிப் பேச்சு பேசும் ஆண்கள் இருக்கின்றனரே என நினைத்து, மனம் வேதனையடைந்தது. ஆண்களே... உங்கள் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் வைத்து, பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், ஒரு அழகான இளம்பெண், அமர்ந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமிருந்தது. அப்பெண், என்னிடம், தான் திண்டுக்கல்லுக்கு புதிது என்றும், அங்குள்ள பெண்கள் கல்லூரி பெயரைக் கூறி, அக்கல்லூரிக்கு எப்படிப் போவது என்ற விவரங்களை சற்று சத்தமாக கேட்டாள். இது போதாதா... இந்தக் கால ரோமியோக்களுக்கு!என் அடுத்த இருக்கையிலிருந்த இளைஞன் ஒருவன், 'எனக்கு தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன்...' என்று, வலிய வந்து, 'ஜொள்ளு' விட்டான். அப்போதும், இந்த பெண் சுதாரிக்கவில்லை. இதை கவனித்த நான், 'என் வீட்டருகில் தான் உள்ளது. நான், உன்னை கல்லூரியில விட்டுட்டு போகிறேன்...' என்றேன். இது, அவனுக்கு பிடிக்கவில்லை. 'ஆன்டி, உங்களுக்கேன் சிரமம்...' என்றான். உடனே நான், 'என் மகள் போன்ற பெண்ணுக்கு, தாய் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டியது என் கடமை. அதனால், நானே அவளை காலேஜுல விட்டுட்டு போறேன்...' என்றேன். உடனே, அவன் முகம் மாறி விட்டது. அவன் இறங்க வேண்டியது கொடைரோடு என்பதை, அவன், 'டிக்கெட்' வாங்கும் போதே கவனித்திருந்ததால், ஏதோ கெட்ட எண்ணத்துடன் பொய் சொல்கிறான் என்று நினைத்து தான், அவனிடம் இப்படி கூறினேன். பெண்களே... புது இடங்களில் பயணம் செய்யும் போது, குறிப்பாக, ரயில் அல்லது பஸ்சில், ஊருக்கு புதியவள் என்பதை பிரகடனப்படுத்தி, கயவர்களுக்கு இடங்கொடுத்து, அவஸ்தைப்படாதீர்கள். அதே போல், பஸ்சில் மொபைல் போனில் உரக்க பேசுவதையும் தவிருங்கள். ஏனெனில், இதுபோன்ற செயல்கள், ஆபத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதை போன்றது.— ஜெ.மீனா, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !