கருணைக் கடல்
நவ.,8 - கந்தசஷ்டிமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இத்தலம், கடலோரத்தில், அலைகள் வீச அமைந்துள்ளதால், 'அலைவா' என்ற பெயரும், இதற்கு உண்டு. முருகப்பெருமான், சூரர்களை வென்று, வாகை சூடிய இடம் இது. இவரது திருவடிகளை, படகிற்கு சமமாக சொல்வர். அதனால் தான், கடற்கரையிலுள்ள செந்தில் முருகனின் திருவடிகளை வணங்கி, வழிபட, பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற, நம்பிக்கையுள்ளது.முருகப்பெருமானும், சூரபத்மனும் போரிடும் போது, சூரன், தன், மாயசக்தியால், மாமரமாக மாறினான். முருகன் தன் வேலினால், அம்மரத்தை இரண்டு கூறாகப் பிளந்து, ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாற்றி, மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.முருகன், ஏன் சூரனின் உடலை, சேவலாக மாற்றினான் என்ற கேள்வி, நமக்குள் எழும். அதற்கு காரணம் உள்ளது.மனிதர்கள், தங்களது வாழ்க்கை, தற்காலிகமானது என்ற நினைப்பை மறந்து, இவ்வாழ்வு நிலையானது என்ற, 'அறியாமை' தூக்கத்தில் இருக்கின்றனர். கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன், சேவல், விடியலை, நமக்கு அறிவித்து விடுகிறது. அதுபோல், உலக வாழ்வு நிரந்தரமானது என்ற, அறியாமை தூக்கத்தில் இருக்கும் நம்மை, தட்டி எழுப்புவதே, சேவல் கூவுவதன் தத்துவம்.சேவல், 'கொக்கரக்கோ' என்று கூவுகிறது. இதை, கொக்கு+அறு+கோ என்று பிரிக்க வேண்டும். கொக்கு என்றால், மாமரம் என்றும் ஒரு பொருள் உண்டு. அறு என்றால், பிளந்த. கோ என்றால், மன்னன். 'சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே' என்னும் பொருளில், சேவல், ஒவ்வொரு நாளும், முருகப் பெருமானை கூவியழைத்து, நம்மையும், அவரை வழிபடச் சொல்கிறது.மயிலை அவர் வாகனமாகக் கொண்டதற்கான காரணம், மனிதனுக்கு இரண்டு கண் தான் உண்டு. ஆனால், மயில் தோகையில், வட்ட வட்டமாக ஏராளமான கண் போன்ற அமைப்பு இருக்கும். உலகத்தை, உன், இரு ஊனக்கண்களால் மட்டும் அளந்து பயனில்லை. ஞானமாகிய, ஆயிரம் கண்களைக் கொண்டு, அளந்து பார். வாழ்க்கையின், உண்மை நிலவரம் புரியும் என்பதை, எடுத்துக்காட்டவே, அவர் மயிலில் பவனி வருகிறார்.திருச்செந்தூர் முருகன், கருணைக் கடலும் கூட. இதோ ஒரு சம்பவம்:இக்கோவில் மடப்பள்ளியில், (சமையலறை) வென்றிமாலை என்ற அடியவர் இருந்தார். கல்வியறிவு இல்லாத அவரை, அம்மடப்பள்ளியிலிருந்த சிலர், அவமானப்படுத்தி வந்தனர். இதனால், மனம் வேதனையடைந்த வென்றிமாலை, முருகனை வேண்டி, 'உனக்கு தொண்டு செய்யும் எனக்கு, இப்படியும் ஒரு சோதனையா?' என்று, கேட்டு, கடலில் மூழ்கி, உயிர் விட எண்ணம் கொண்டார். அவரைக் காப்பாற்ற, திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், அவருக்கு, தமிழ் அறிவைத் தந்தார். முருகனின் அருளால், தமிழ் அறிவைப் பெற்ற வென்றிமாலை, திருச்செந்தூர் முருகன் மீது, கவி பாடி, 'கவிராயர்' என்னும் பட்டம் பெற்றார். மேலும், திருச்செந்தூர் ஸ்தல புராணத்தையும் பாடியுள்ளார். பாமரனையும், பாவலராக்கும் கருணை குணம் கொண்டவர் முருகப்பெருமான்.முருகனை வழிபடுவோருக்கு, கிரகதோஷம் இல்லை என்கிறார் அருணகிரிநாதர். 'கந்தர் அலங்காரம்' என்னும் நூலில், நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்),சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே... - என்கிறார் அவர்.இந்தப் பாடலில் குறிப்பிடப்படும், 27 உறுப்பு மற்றும் 27 அணிகலன்கள், நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதை, தினமும் பக்தியுடன் பாடி வந்தால், கிரகங்களால் ஏற்படும் கிரகதோஷம் நீங்கும். 'வெற்றி வேல் வீர வேல்' என்ற முழக்கமும், 'சரவணபவ' மற்றும் 'வேலுமயிலும்' என்ற ஆறெழுத்து மந்திரங்கள் முருகனுக்குரியவை. இவற்றை தினமும் ஓதினால், செந்தில் முருகன் நம்மோடு இருந்து, எல்லா செயல்களிலும், வெற்றியை குவிக்க அருள் செய்வார்.தி.செல்லப்பா