உடும்பு சிவலிங்கம்!
காட்டிலுள்ள மரங்களில், உடும்பு என்னும் ஜந்து, கெட்டியாகப் பிடித்து அமர்ந்திருக்கும். இதன் வாலில், கயிறு கட்டி ஏறுபவர்கள் உண்டு. எவ்வளவு பலத்துடன் இழுத்தாலும், அது, தன் பிடியை விடாது. இந்த உடும்பின் வடிவத்திலுள்ள சிவலிங்கத்தை, காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீசர் கோவிலில் தரிசிக்கலாம்.சிவ பூஜை செய்ய, பூலோகம் வந்த, பிரம்மா, தினமும் பழம் தரும், அதிசய பலா மரம் ஒன்றை நட்டார். அதைக் கண்டு வியந்தான், ராஜேந்திர சோழன். அந்தப் பழத்தை, தினமும் ஒருவர், தலைச்சுமையாக சிதம்பரம் கோவிலுக்கு எடுத்துச் சென்று, நடராஜருக்கு நைவேத்யமான பின், தனக்கு அனுப்ப உத்தரவிட்டான்.ஒருநாள், அந்தண சிறுவனின் முறை வந்தது. அவன், ஊர் மக்களிடம், 'நான் சிறுவன் என்பதால், பழத்தை சுமப்பது சிரமம். நீங்கள் பழத்தை எடுத்துச் செல்லுங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்...' என்றான். அனைவரும் சிதம்பரம் புறப்பட்டனர். அந்த மரத்தை அழித்து விட்டால், பழம் சுமக்கும் தொல்லை, மக்களுக்கு இருக்காது எனக் கருதி, அதை எரித்து விட்டான், சிறுவன்.கோபமடைந்த ராஜேந்திர சோழன், சிறுவனை நாடு கடத்த உத்தரவிட்டான். காவலர்கள், சிறுவனை இழுத்துச் சென்ற போது, மன்னனும் சென்றான். சிறுவனை விட்டுத் திரும்பும் வழியில், ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க முயன்றபோது, புற்றுக்குள் மறைந்தது. புற்றைத் தோண்டிய போது, உடும்பின் வால் மீது கோடரி பட்டு, ரத்தம் வந்தது. அப்போது, வானில் அசரீரி ஒலித்தது.'மன்னா... ஒரு சிறுவனால் சுமக்க முடியாது என்று தெரிந்தும், பழத்தை நீண்ட துாரம் சுமக்க உத்தரவிட்டாய்; இது தவறு. இந்த பாவம் தீர, இங்கே கோவில் கட்டு. இப்போது, உன் கண் முன் உடும்பாக தோன்றியது நானே...' என்று உத்தரவிட்டார், சிவன். மன்னனும், கோவில் கட்டினான். இதனால், இங்குள்ள சிவலிங்கம், உடும்பின் வால் அளவே உள்ளது. திருப்பரங்குன்றத்தில், முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த போது, திருமணப் பரிசாக, வெள்ளை யானை கொடுத்தான், இந்திரன். மயில் வாகனனான முருகன், அந்த யானையில் அமர்ந்துள்ளது விசேஷம். கோவில் விமானத்தில், வீணை வாசிக்கும் நிலையில் காட்சியளிக்கிறார், தட்சிணாமூர்த்தி. மகப்பேறு கிடைக்க, அம்பிகை திருப்புவன நாயகியை வணங்குகின்றனர்.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், கீழ்ரோடு வழி, 16 கி.மீ., சென்றால், திருமாகறலை அடையலாம். - சி. செல்லப்பா