உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள சகோதரிக்கு, நான், 71 வயது முதியவன். வங்கியில் பணியாற்றி, தற்போது, 'பென்ஷன்' வாங்கி கொண்டிருக்கிறேன். எனக்கு, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களை, பொறியியல் படிக்க வைத்து, வேலை வாங்கி கொடுத்து, திருமணம் மற்றும் வாழ்வாதாரம் என, அனைத்தையும் செய்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் யாரும் எனக்கு ஆதரவாக இல்லை. அவர்களுக்காக நான் வாங்கிய கடன், 30 லட்சம் ரூபாய் உள்ளது. குழந்தைகளை வளர்ப்பது, எவ்வளவு கடினம் என்பது, என்னைப்போன்ற தந்தைக்கு தான் தெரியும். என் குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, எந்த பலனும் கிடைக்கவில்லை என்பது தான் மிக வருத்தம். ஐ.டி., கம்பெனியில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, மாமியார் தொல்லை தாங்க முடியாமல், தன் வேலையை ராஜினாமா செய்து விட்டாள், மகள். மூத்த மகன், வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்றவன், 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்களுடன் தொடர்பில் இல்லை. அடுத்த மகன், சுய தொழில் செய்து, வருமானம் சரியாக இல்லாமல், கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான். நான் கடனால், தினந்தோறும் அவஸ்தை படுகிறேன். கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைந்து கொண்டுள்ளேன். உறவினர்களே கேவலமாக பேசுகின்றனர். சுருக்கமாக சொன்னால், நான் பெற்ற பிள்ளைகளிடமிருந்து பொருளாதார உதவி கிடைக்கவில்லை. கடன் பிரச்னையால், நிம்மதி இல்லாமல், 13 ஆண்டுகளாக இருக்கிறேன். மகள், இல்லத்தரசியாக இருப்பதால், அவளாலும் எனக்கு உதவி செய்ய முடியவில்லை. மூத்த மகனிடமிருந்து, எந்த தகவலும் இல்லை. அடுத்த மகன், வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படுகிறான். மகன்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன், சகோதரி. கடனை அடைப்பதற்கு தீர்வு கிடைக்குமா? -இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகர். அன்பு சகோதரருக்கு, வங்கியில் என்ன பணி செய்தீர்கள்? வங்கி மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் எவ்வளவு? நீங்கள் கட்ட வேண்டிய பணம், 30 லட்சம் ரூபாய். மகன், மகளுக்காக வாங்கிய கடனும், அதனுடன் சேர்ந்த வட்டியுமா? இந்த கடன் நீங்கள் பணியில் இருக்கும்போதே அல்லது ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் போதே கட்டி அடைத்திருக்கலாமே! வங்கி உங்கள் மீது வழக்கு போட்டிருக்கிறதா அல்லது நீங்கள் வாங்கிய கடன் தனியாரிடமிருந்து வாங்கியதா? வெறும், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வட்டிகுட்டி போட்டு அது, 30 லட்சம் ரூபாய் ஆகிவிட்டதா? உங்கள் மூத்த மகன் எந்த வெளிநாட்டில் என்ன வேலை பார்க்கிறான் என்று, அவனது நண்பர்களிடம் விசாரியுங்கள். மொபைல் போன் எண் கொடுத்து விடுவர் அல்லது அவன் வேலை பார்க்கும் நாட்டில் இருக்கும் இந்தியத் துாதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மகனின் தற்போதைய வெளிநாட்டு முகவரியை தந்து விடுவர். அவனைத் தொடர்பு கொண்டு, முழுத் தொகையை கட்டச் சொல்லுங்கள். முழுத்தொகையை கட்டமாட்டேன் என்றால், பாதித் தொகையாவது கட்டச் சொல்லுங்கள். முதலில் அன்பாக சொல்லுங்கள். கேட்காவிட்டால் அதட்டி சொல்லுங்கள். பாதிகடனை அடைக்காவிட்டால் மகனின் முகவரியை வங்கியில் கொடுப்பேன் என, மிரட்டுங்கள். மகளிடம், 15 கிராம் தங்கம் கேளுங்கள். அப்பாவின் மெய்வருத்தத்தை உணர்ந்தவள் என்றால், கட்டாயம் தருவாள். காலி மனை எதாவது உங்கள் பேரில் இருந்தால் விற்று, கடனை அடையுங்கள். நேராக வங்கி மேலாளரை போய் சந்தியுங்கள். நோய்வாய்பட்டோர், வறுமையில் இருப்போரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வார், மேலாளர். முழு கடன் ரத்து ஆகாது. வட்டி குறைப்பு, தவணை நீட்டிப்பு, ஒரு பகுதியை செலுத்தி, மீதிவட்டி அபராதத்தை தள்ளுபடி செய்தல் போன்றவை நடக்கும். வாங்கிய கடனை நீங்கள் கட்டாவிட்டால், இணை விண்ணப்பதாரர் அல்லது ஜாமீன்தாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளே அடைக்க வேண்டும். இரண்டாவது மகன் குடிநோயாளியா, படிப்பறிவு இல்லாதவனா, நிலையான பணியில் இல்லாதவனா? அவனுக்கென்ன பிரச்னை. மகன்களோ, மகளோ உதவாவிட்டால், எதாவது ஒரு வேலைக்குப் போங்கள். அதில் வரும் ஊதியத்தை வைத்து ஜீவிதத்தை நடத்துங்கள். ஓய்வூதியம் முழுவதையும் வங்கிக்கடனுக்கு, இ.எம்.ஐ.,யாகக் கட்டுங்கள். ஓடிப்போன மூத்த மகன் மற்றும் உருப்படாத இளைய மகனுடன் சேர்ந்து வாழ ஏன் ஆசைப்படுகிறீர்கள்? மகளுடன் சேர்ந்து வாழுங்கள். சாப்பாடு தங்குமிடம் செலவு மிச்சமாகும். மகளின் அன்பும் கிடைக்கும். கடனை அடைக்க வேண்டும் என, முழு மனதுடன் செயல்படுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். -உங்கள் சகோதரி, சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ganessh sitaram
மே 18, 2026 13:46

please develop detachment from now on. get some job to fulfill your needs= rent, food, medicine. If you can save fine. If not do not worry. dont expect or have affection to stay with children. It is hightime you developed detachment. I have done. I am 73 and a widower, with similar issues. But I have developed detachment. If you are god loving go to nearby temples. If health permits do some service in the temple. Reg loan you have to talk to your children and decide. Without knowing the details no further discussion is possible,


Anantharaman Srinivasan
மே 17, 2026 19:40

கடன் மூழுகி அறிவுரை கேட்டிருக்கும் வாசகர் Information விவரமாகயில்லை. சகுந்தலா மேடம் அறிவுரையும் சரியில்லை.


Natarajan Ramanathan
மே 17, 2026 12:03

மக்களிடம் வாங்கும் தங்கம் யாருக்கு? சகுந்தலாவுக்கா?