காதலர் தினம்!
காதலர் தினம் உருவான கதை! ரோமாபுரியை ஆட்சி புரிந்த, இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர், தன் நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது என, தடை விதித்தார். ஆனால், அவர் விதித்த தடையை மீறி, வாலண்டைன் என்ற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து காதலித்த பலருக்கு திருமணமும் செய்து வைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்ததால், வாலண்டைனின் தலை, பிப்., 14- கி.பி.269ல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமான பிப்ரவரி, 14 அன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டம்! பி ப்., 14 என்றாலே, யுவன், யுவதிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. காதலிப்பவர்கள், காதலிக்க துாதுவிட்டு கொண்டிருப்பவர்கள் மற்றும் ஒருதலையாக காதலிப்பவர்கள் என, எல்லாருக்குமே இந்த நாள் மிக குதுாகலமான நாளாகும். காதலர் தினம் என்றால், காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்று அர்த்தமல்ல. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரிகள், நண்பர்கள் என, எந்த உறவாக இருந்தாலும், நீங்கள் உண்மையான பாசத்தை காட்ட நினைத்தால், அனைவருடனும் இந்த காதலர் தினத்தை இணைந்து கொண்டாடலாம். கடந்த, 1980 மற்றும் 1990களில் காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட சில உபாயங்கள். * கோவிலுக்கு வரச்சொல்லி காதலை சொல்வது * 'டைப்ரைட்டிங்' வகுப்பில் காத்திருந்து, 'லவ்' லெட்டர் கொடுப்பது * பாட்டுப்பாடி காதலை தெரிவிப்பது * பிடித்த புத்தகம் வாங்கி கொடுத்து காதல் துாது அனுப்புவது * காதலிக்கும் பெண் முன், 'கெத்தாக' சைக்கிளில் வருவது * கண் ணால் பேசிக் கொள்வது * பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பது * வகுப்பறை பெஞ்சில் பெயர் எழுதி வைப்பது * பிடித்தவரின் நோட்டில் பெயர் எழுதி வைப்பது * 'ஐ லவ் யூ' என்று எழுதி, பேப்பர் அம்பை வீசி, காதல் தெரிவிப்பது * கவிதை எழுதி காதலை சொல்வது * பக்கம் பக்கமாக லெட்டர் எழுதி காதலை சொல்வது * ஒற்றை ரோஜா கொடுத்து காதலை தெரிவிப்பது * வாழ்த்து அட்டை வாங்கி கொடுத்து காதலை சொல்வது என, காதலை தெரிவிக்க பல வழிகளை கையாண்டனர். காதல், திருமணத்தில் முடிய வேண்டும் என்பது காதலிப்பவர்களின் விருப்பம். திருமணமானவுடன் காதலை மறக்காமல் எப்போதும் ஒருவருக்கொருவர் விரும்பினால் தான் அன்பு நீடிக்கும். அன்பை வார்த்தைகளில் காட்டாமல், செயல்களில் காட்டுவது சிறந்தது. இன்றைய காதலர் தின கொண்டாட்டம்! இன்றைய இளைய சமுதாயத்தினர் தங்களின் காதலை வெளிப்படுத்த ஏராளமாக செலவுகளை செய்து, விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கி இத்தினத்தை கொண்டாடுகின்றனர். அன்று, காதலர் தினம் என்ற ஒரே ஒரு நாளையே கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இப்போதெல்லாம் காதலர் தினத்துக்கு முன், ஒரு வாரம் விதவிதமான பெயர்களில் கொண்டாடி, இறுதியாக இந்த காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பிரமாண்டமாக அனைவரும் பார்க்கும்படி பொது இடங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இன்று, சமூக வலைதளங்களின் மூலமும் பலர் காதல் செய்கின்றனர். ஆனால், இது எல்லா நேரங்களிலும் சரியானதாக அமைவதில்லை. சில சமயம் அது தவறான முடிவுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, முகம் தெரியாத நபர்களை நம்பாமல், நேரில் பார்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஏ.எஸ்.கோவிந்தராஜன்