உள்ளூர் செய்திகள்

உனக்காகவே நான்! (18)

முன்கதைச் சுருக்கம்: செ ன்னையில் நடக்கவிருக்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதற்காக, இருவருக்கும் விலை உயர்ந்த, 'டிரஸ்' எடுத்தான், சித்தார்த். சென்னையில் உள்ள, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தார், கிரிக்கெட் போர்டு தலைவர், ரங்கநாதன். ராஜாமணிக்கு போன் செய்துவிட்டு, அவன் வீட்டுக்கு சென்றனர், சித்தார்த்தும், நித்யாவும். திருமண வரவேற்பு பத்திரிகையை அவர்களுக்கு கொடுத்து, நித்யாவின் அத்தை மற்றும் மாமாவுக்கு டிரஸ், வாட்ச், வைர நெக்லஸ் பரிசளித்தான், சித்தார்த். நித்யாவின் வீட்டுக்கு சென்று, அவள், அம்மா-அப்பா மற்றும் அண்ணன், தங்கைகளுக்கு அன்பளிப்பு கொடுத்தனர். ''அ வன் குடுக்குறத வாங்குன, அப்படியே வீட்டை விட்டு வெளிய போயிடு. உனக்கும், சேர்த்து தலை முழுகிடறேன்,'' என்று கர்ஜித்து உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து பரபரவென்று வெளியேறினார், நித்யாவின் அப்பா. அம்மாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. ''தப்பா நினைக்காதீங்க, சித்தார்த். இதை நீங்களே எடுத்திட்டுப் போயிடுங்க.'' ''என்ன அத்தை இப்படி சொல்றீங்க?'' ''இவரைப் பத்தி முழுசா உங்களுக்கு தெரியாது. எப்படா கிழவன் மண்டையப் போடுவான்... திண்ணை காலியாகும்ன்னு காத்துக்கிட்டிருக்கிற வீடு. என்னை வெளியே அனுப்பிட்டா, சந்தோஷமா அந்த, சகுந்தலாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, இங்கேயே குடும்பம் நடத்துவாரு. என் வீடா இருக்கிறது, அவ வீடா மாறிடும். அப்புறம் என்னால இதுக்குள்ள நுழையவே முடியாது. நான் ஒருத்தியாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. கூடவே ரெண்டு பொண்ணுங்களைப் பெத்து வெச்சிருக்கேன்,'' என்று கண்ணீர் விட்டாள், அம்மா. வேறுவழியின்றி, 'சூட்கேசு'டன் வெளியில் வந்ததும், சித்தார்த் அதை, ராஜாமணியிடம் கொடுத்தான். ''இதை வெச்சிக்குங்க, ராஜாமணி. என்னைக்காவது, நித்யா அம்மாவுக்கு இது தேவைப்படும். அன்னைக்கு கொடுங்க,'' என்று கூறி, மூவரும் காரில் ஏறினர். ''ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்...'' என, காரிலிருந்து இறங்கினான், சித்தார்த். ஒரு அழைப்பிதழை எடுத்துக்கொண்டு, பத்ரி வீட்டுக்குப் போனான். இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தான். ''இன்னிக்கு இந்த, 'ரிசப்ஷன்' நடக்குதுன்னா அதுக்கு மூல காரணமே, பத்ரி தான். அவனைக் கூப்பிடாமல் போகலாமா? அதான்.'' எப்பேர்ப்பட்ட மனிதன் இவன். இவனுடைய உயரம் என்ன! பேர், புகழ், கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றிலும் எங்கோ இருப்பவன். ஆனாலும், கால்களை மண்ணில் பதித்து தான் நடக்கிறான். எல்லாரையும் மதிக்கிறான். எல்லார் மீதும் அன்பு செலுத்துகிறான். விளையாட்டிற்காக மட்டுமல்ல; வசீகரமான தோற்றத்திற்காக மட்டுமல்ல; இந்த அன்பிற்காகவும் தான் ரசிகர்கள் இவனைக் கொண்டாடுகின்றனர். ''வீடு வந்திடுச்சு, ராஜாமணி. அப்படி என்ன தீவிர யோசனை?'' ''ஓ... சாரி,'' என்று, சித்தார்த் தந்த, 'சூட்கேசு'டன் இறங்கினான், ராஜாமணி. ''நாங்க போய் ஹோட்டல்ல இறங்கிட்டு இந்த வண்டியை உனக்கு அனுப்பிடறேன். அம்மா, அப்பாவை அழைச்சுக்கிட்டு சீக்கிரம் வந்துடு. நேரா ஹோட்டலுக்கே வந்திடுங்க. எல்லாரும் ஒன்றாகப் போகலாம்.'' அ ன்று மாலை, சிதம்பரம் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. மேட்சிற்கு வருகிற மாதிரியே, மஞ்சள் உடையில் ரசிகர்கள் வந்திருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் எள் விழ இடமின்றி கூட்டம். எல்லா இடங்களிலும் எல்.இ.டி., 'டிவி' வைத்து, நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர். ரோஜா நிற அதிநவீன உடையில், நித்யாவும், பளீர் நீல வண்ண சூட்டில், சித்தார்த்தும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி, மைதானத்திற்குள் நுழைந்ததும் ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். 'சித்தார்த்... சித்தார்த்...' என்ற குரல், விண்ணைத் தொட்டது. நித்யாவின் கையோடு, பிணைந்திருந்த தன் கையைத் துாக்கி ரசிகர்களுக்கு காட்டினான். பின்னர், அலங்கரிக்கப்பட்ட, திறந்த காரில் இருவரும் ஏறி மைதானத்தை சுற்றி வந்து, ரசிகர்க ளின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர். ரசிகர்கள் வீசிய மலர் கொத்துக்களும், ரோஜா மாலைகளும் காரில் வந்து விழுந்தன. ரோஜா மாலை ஒன்றை எடுத்து தான் அணிந்து கொண்டு, மற்றொன்றை, நித்யாவிற்கு அணிவித்தபோது, கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. மைதானத்தை சுற்றியதும் நடுவில், காரை நிறுத்தி இருவரும் புன்முறுவல் பூத்தனர். உள்ளேயிருந்து கையில், 'மைக்'கோடு, கவாஸ்கரும், கூடவே, டெண்டுல்கரும் வந்ததும் கூட்டம் ஆரவாரித்தது. சுற்றியிருந்த கூட்டத்தினருக்கு கையசைத்த, கவாஸ்கர், சித்தார்த் - நித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவாஸ்கர் பேசி முடித்ததும், 'மைக்'கை வாங்கி, பேச ஆரம்பித்தார், டெண்டுல்கர். இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தவர், ''இங்குள்ள ரசிகர்களும் சேர்ந்து உனக்கு, 'கல்யாணப் பரிசு' கொடுக்கப் போகின்றனர். அவர்கள் சார்பாக அதை உங்களிடம், ஸ்ரீகாந்த் வழங்குவார். ஸ்ரீகாந்துடன் அழகான இளம்பெண் தட்டில் காட்டன் துணி போட்டு அதன் மீது ஒரு கவர் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள். சித்தார்த்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதற்கு முன் இதுபோன்று நடந்ததே இல்லை. எல்லாம், நித்யாவின் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டான். ஸ்ரீகாந்த் அருகில் வந்து, சித்தார்த் கவுதமின் கை பற்றி குலுக்கி விட்டு கேட்டார்... ''சித்... இந்தக் கவரில் என்ன இருக்கும் என்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?'' 'ம்...?' என்று யோசித்த, சித்தார்த் கவுதம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, 'இல்லை' என்று தலையாட்டினான். ''உங்களால் சொல்ல முடியுமா, மிஸஸ் சித்தார்த்?'' ''கேஷ் சர்டிபிகேட்?'' ''சித்தார்த், 'ஈஸ் எ மில்லியனர்' என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரியும். அதனால், அது இல்லை.'' ''யோசிச்சு சொல்லுங்க?'' ''புதுசா வாங்கின கார் சாவி?'' ''சித்தார்த்கிட்ட இல்லாத காரா?'' என்ற, ஸ்ரீகாந்த் ரசிகர்களை நோக்கி, ''என்ன ரசிகர்களே... இவர்களால் ஊகிக்க முடியவில்லை. சொல்லிவிடட்டுமா?'' என்று கேட்க, 'ஓ.கே.,' என, அவர்களின் அனுமதி கிடைத்ததும், உரத்து கூறினார், ஸ்ரீகாந்த்... ''நீயும், உன் மனைவியும், 'ஹனிமூன் ட்ரிப்' போக இவங்க எல்லாரும் பணம் போட்டு, 'பாக்கேஜ் டிரிப் டிக்கெட்' எடுத்திருக்காங்க.'' ''ஈஸ் இட்,'' பிரமித்து பரவசப்பட்டு போனான், சித்தார்த். ''எங்க போக எடுத்திருக்காங்க தெரியுமா?'' ''ஊஹும்.'' ''கம்ப்ளீட் ஐரோப்பா டூர்.'' ''ஓ!'' என்று ரசிகர்களுக்கு கையாட்டினான். ''இரு, இரு... அடுத்ததையும் கேட்டுவிட்டு, கையாட்டு. எதுல போக, 'டிக்கெட்' எடுத்திருக்காங்க தெரியுமா?'' ''பிளைட் தானே?'' என்றான், சித்தார்த். ''இல்லை, இதுவரை நீ கப்பல்ல போயிருக்கியா, சித்தார்த்?'' ''இல்லை.'' ''அதை யோசித்து, கப்பல்ல போக, 'டிக்கெட்' எடுத்திருக்காங்க. கிட்டத்தட்ட ரெண்டு மாச, 'டூர்!' முக்கியமா, வெனிஸ்ல ரெண்டு நாள் தங்க, 'காட்டேஜ்' ஒதுக்கியிருக்காங்க. லண்டன், அங்கிருந்து பிரான்ஸ், திரும்ப லண்டன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, வெனிஸ்ன்னு, 'எக்ஸலெண்ட் ஹனிமூன் டிரிப்!' சித்தார்த்.'' லேசாக கண்கலங்கிற்று, சித்தார்த்திற் கு. இந்த அன்பிற்கெல்லாம் கைமாறு செய்ய முடியுமா என்று தோன்றிற்று. தன்னால், இவர்களுக்கு செய்யக்கூடிய கைமாறு நன்றாக விளையாடுவது. வேறு என்ன செய்ய முடியும்? வேறு எதை அவர்கள் எதிர்பார்ப்பர்? ''என்ன, சித்தார்த் அமைதியாயிட்ட?'' ''இல்ல சார். மனசு உருகிப் போயிடுச்சு.'' ''எங்க மனசெல்லாம் உருக நீ ஒரு வேலை செய்யணும்?'' ''சொல்லுங்க, சார்.'' ''இந்த ரெண்டு மாச, 'ஹனிமூன் டிரிப்'புல, குட்டி சித்தார்த் உருவாகணும்!'' அத்தனைக் கூட்டத்திற்கு மத்தியில் அதை சொன்னதும், நித்யாவை வெட்கம் பிடுங்கித் தின்ன தலைகவிழ்ந்து கொண்டாள். அதை கேட்டு உற்சாகமானான், சித்தார்த். ''ஹை, இது என் சப்ஜெக்ட்,'' என்றவன், 'மைக்'கில் ரசிகர்களைப் பார்த்து கேட் டான்... ''மைடியர், பேன்ஸ்... எப்போதாவது நான், 'சிங்கிள் ரன்' ஓடி பார்த்திருக்கீங்களா?'' ''இல்ல, இல்ல,'' ''டூ, போர், 'சிக்ஸ்' தானே?'' ''யெஸ்.'' ''அதே தான், 'ஹனிமூன்' விஷயத்துலேயும், ஸ்ரீகாந்த் சார், குட்டி சித்தார்த்துன்னாரு. ஆனா, நான் சொல்றேன், குட்டி சித்தார்த்தோட, குட்டி நித்யாவும். 'டிவின்ஸ்' தான்.'' ரசிகர்களின் ஆரவாரத்தை அடக்க முடியவில்லை. அந்த ஆரவாரத்திற்கிடையே, ஸ்ரீகாந்த் கேட்டார்... ''எத்தனை குழந்தைங்க பெத்துக்கறதா உத்தேசம், சித்?'' ''எப்படி, 'சிக்ஸ் பால்ஸ்ல, சிக்ஸர்' அடிச்சு, 'ஸோபர்ஸ் ரிகார்டை' தோற்கடிக்கணும்ன்னு நினைக்கிறேனோ, அதே மாதிரி குழந்தைங்க விஷயத்துல, குசேலரைத் தோற்கடிக்கணும்ன்னு ஆசை. பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழப் போறேன்.'' ''ததாஸ்து!'' என்றார், ஸ்ரீகாந்த். நித்யாவின் குனிந்த தலை கடைசிவரை நிமிரவே இல்லை. வி மானப் படிக்கட்டுகளில் ஏறுகிற மாதிரியே, கப்பல் படிக்கட்டுகளிலும் துள்ளி குதித்து ஏறினான், சித்தார்த். சகல வசதிகளோடு கூடிய முதல்தரமான கப்பல் அது. கடலில் மிதக்கும் சொர்க்கம் என்பர். ஒரு குட்டி அரண்மனை நகருவது போல் நகரும். இரவு நேரமானால், ஜக ஜோதியாக மின்னும். இதுபோன்ற கப்பலில் தங்களுக்கு டிக்கெட், 'புக்' பண்ணிக் கொடுத்த ரசிகர்களுக்கு ஆத்மார்த்தமாக மனதிற்குள்ளாகவே நன்றி சொன்னான். கண்கள் அகல பிரமித்து போய் பார்த்துக் கொண்டிருந்த, நித்யாவிடம் கேட்டான்... ''நீ கப்பல்ல போயிருக்கியா, நித்யா?'' ''விமானத்தை மேலே பறக்கிறபோது நிமிர்ந்து பார்த்திருக்கிறேன். கப்பலை கண்ணால் கூட கண்டதில்லை. சின்ன வயசுல நானும், ராஜாமணியும் மழைல நனைஞ்சுக்கிட்டு காகிதத்துல கப்பல் செய்து ஓடுற மழைத்தண்ணீர்ல விட்டதோடு சரி.'' ''ஏய் நான் தான் உன்னை விமானத்துல கூட்டிக்கிட்டுப் போனேனே... இதோ இப்ப கப்பல்ல வர்ற. அடுத்து, 'ராக்கெட்' தான். நாசா விஞ்ஞானிகளை, 'தாஜா' பண்ணி, 'ராக்கெட்'ல நீயும், நானும் சந்திர மண்டலத்துக்கு போக ஏற்பாடு பண்ணட்டுமா?'' ''நான், சரின்னு தலையாட்டினா, நாளைக்கே கூட ஏற்பாடு பண்ணிடுவீங்க; பண்ணக்கூடிய ஆளுதான்! நீங்க கையசைச்சா போதும், நுாறாளுங்க ஓடிவந்து செய்ய காத்துக்கிட்டிருக்காங்க.'' ''அந்த மாதிரி ஆளு தான் உன் தரிசனத்துக்காக, உன் காலேஜ் வாசல்ல தவம் கிடந்து, உன் பின்னாலேயே சுத்தி, வேப்பிலை அடிச்சு, கெஞ்சிக் கூத்தாடி கல்யாணம் பண்ணியிருக்கேன்.'' ''கெஞ்சி கூத்தாடற ஆளப் பாருங்க. சரி, இப்படி கேபினுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்க என்னவோ மாதிரி இருக்கு. கப்பலோட மேல் தளத்துக்குப் போய் கடலின் அழகையும், ராத்திரி நேர வானத்து அழகையும் ஒரு சேர ரசிக்கலாம் வாங்களேன்.'' ''ஐ அப்ஜெக்ட் ஒன் திங் இன் யுவர்...'' என்று, சித்தார்த் பேசும்போது, இடையில் குறுக் கிட்ட நித்யா, ''என்ன, 'அப்ஜெக்ஷன்' அது?'' என்று கேட்டாள். - தொடரும்இ.ரங்கநாயகி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nathan
செப் 06, 2026 18:30

எழுத்தாளர் திகட்ட திகட்ட இனிப்பாக எழுதிக்கொண்டிருப்பதை படித்தால் ஏதோ பெரிதாக வெடி வைக்க போகிறார் போல் உள்ளது