சிட்டுக் குருவிக்கென்ன...
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ... விடா முயற்சி என, பல விதங்களில் சொன்னாலும், உழைப்பும், முயற்சியும் இன்றி, 'அதைக்கொடு, இதைக்கொடு...' என, தெய்வத்திடம் கேட்பது நியாயமா?மண் சுமந்து, அடிபட்டு, பாலம் கட்டி, பகைவனை வென்று, மாடு மேய்த்து என, பலவிதங்களிலும் திருவிளையாடல்கள் செய்து காட்டிய தெய்வத்திடம் போய், உழைக்காமல் ஊதியம் கேட்கலாமா?இதற்கான விடையை, 'ஆத்திச்சூடி வெண்பா' எனும், பழந்தமிழ் நுால் சொல்கிறது.கடற்கரையில் ஓரிடத்தில், ஆணும் பெண்ணுமாக இரு சிட்டுக்குருவிகள் இருந்தன. அவ்வப்போது, பெண் சிட்டுக்குருவி முட்டைகள் இடும். அம்முட்டைகளை கடல் அலைகள் அடித்துப் போய் விடும். சிட்டுக் குருவிகளுக்கு வருத்தம் தாங்கவில்லை. கடலைப் பார்த்து, 'கடலே... கர்வமா உனக்கு. விட்டு வைக்க மாட்டேன் உன்னை. அழித்துவிட்டு தான் மறு வேலை...' என்று கத்தியது, ஆண் சிட்டுக்குருவி. நடக்கக்கூடிய காரியமா என்ன?அதற்காக சோர்ந்து போகவில்லை, சிட்டுக்குருவி.தர்ப்பைப் புல்லைத் தண்ணீரில் நனைத்து கீழே சொட்டுவதைப் போல, தன் கூர்மையான அலகால் (மூக்கால்) கடல் நீரை சொட்டு சொட்டாக எடுத்து, கரையில் போட்டுக் கொண்டே இருந்தது. கடல் காலியாகுமா என்ன?பல நாட்கள் முயன்றும், தன் எண்ணம் பலிக்காததால், தன் இனத்தைச் சேர்ந்த சிட்டுக்குருவிகள் அனைத்தையும் கூட்டமாக அழைத்து, கருட பகவானிடம் போய் முறையிட்டது.அனைத்தையும் அழைத்து திருமாலிடம் போய், நடந்தவற்றையெல்லாம் சொல்லி முறையிட்டார், கருட பகவான்.அனைத்தையும் அழைத்து, கடற்கரையை அடைந்து, 'சிட்டுக்குருவியின் முட்டைகளைக் கொடுத்து விடு...' என்று, கட்டளையிட்டார், பகவான்.அதன்படியே கடலும், சிட்டுக்குருவியின் முட்டைகளை பொறுப்பாகத் திருப்பி அளித்தது. பெரியவர்களைத் துணை கொண்டால், முடியாதது இல்லை என்பதை விளக்குவதோடு, 'என் கடமையை, என்னால் செய்ய முடிந்ததை செய்து விட்டேன். இனி தெய்வமே, உன் பொறுப்பு...' என முறையிட்டால், கூடவே இருந்து துயரை நீக்கும் தெய்வம்.உணர்வோம், உயர்வோம்! பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது.மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் பறந்தோடும். திங்களன்று அர்ச்சனை செய்ய, மன பலம் அதிகரிக்கும். தொடர்ந்து, 48 நாள் செய்தால், விருப்பம் நிறைவேறும்.