உள்ளூர் செய்திகள்

கொத்தவரை பயிரைத்தாக்கும் காய்ப்புழு

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: இந்தப்பூச்சி பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று. கொத்தவரையைத் தவிர தக்காளி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மொச்சை, அவரை, மிளகாய், சோயா மொச்சை போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக்கூடியது. புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக்கூடியவை. புழுவின் தலையும் உடலின் முன்பகுதியும் மட்டுமே காய்களுக்குள் செல்லும். மதிப்பகுதி காயின் வெளியே காணப்படும். ஒரு புழு பல காய்களைத் தாக்கும். காய்கள் உண்டாவதற்கு முன் புழுக்கள் செடிகளின் குருத்துப் பகுதிகளையும் இலைகளையும் கடித்து உண்டு அழிக்கும்.பூச்சியின் வாழ்க்கை சரிதம்: பெண் அந்துப்பூச்சி, முட்டைகளை இலைகள், பூ மொக்குகள், பூக்கள், பிஞ்சுக்காய்கள் ஆகியவற்றின் மேல் தனித்தனியாக இடும். ஒரு பூச்சி 300-1000 முட்டைகள் வரையில் இடக்கூடியது. அவை கோள வடிவமாகவும் இளம் மஞ்சள் நிறத்திலும் வரிவரியாக கோடுகளுடனும் தென்படும். இவை 3-5 நாட்களில் பொரித்து இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடனும் கரும்பழுப்பு நிறத் தலையைக் கொண்டும் உடலில் நுண்ணிய கருமை நிறப் புள்ளிகளுடனும் மெல்லிய ரோமங்களுடனும் தென்படும். அவை 15-25 நாட்களில் முழு வளர்ச்சிஅடையும். வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கடியில் கூண்டுப்புழுக்களாக மாறும். கூண்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி 10-15 நாட்களில் வெளிவரும். அந்துப்பூச்சிகள் தடிமனாகவும் இளம்பழுப்பு நிறத்திலும் தென்படும்.பூச்சி கட்டுப்பாடு: * கொத்தவரை அறுவடைக்குப் பின் உடனடியாக செடிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.* வயலை நன்றாக உழுது மண்ணுக்கடியில் இருக்கும் கூண்டுப்புழுவை அழிக்கலாம். * புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும்.* வயலில் காணப் படும் பெரிய புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். * விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.* இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.* டிரைக்கோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணி முட்டைகளை தாக்கி அழிக்கக்கூடியது.* பிரக்கான், கிலோனஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகள் புழுக்களைத் தாக்கி அழிக்கக்கூடியவை.முனைவர் கோ.பி.வனிதா,வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !