உள்ளூர் செய்திகள்

வறட்சியை தாங்கி வளரும் ஆவாரம் செடி

ஆவாரம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.ஜெயந்தி கூறியதாவது: கொய்யா, அத்தி உள்ளிட்ட பல்வேறு பழ செடிகளை உற்பத்தி செய்து வருகிறேன். இதுதவிர, மகோகனி, செம்மரம், குமிழ் தேக்கு உள்ளிட்ட பல வித மரச்செடிகளை உற்பத்தி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆவாரம் செடிகளை வரப்பு பயிராக சாகுபடி செய்து வருகிறேன். ஆவாரம் செடி செம்மண், வண்டல் மண், சவுடு மண் உள்ளிட்ட அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மை உடையது. இந்த ஆவாரம் செடியை பொருத்தவரையில், இலை, குச்சி, பூக்கள் என, அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக, வறண்ட நிலங்களிலும், வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது. ஆவாரம் செடியை, சந்தைப்படுத்தும் திறன் இருக்கும் விவசாயிகளுக்கு, அதிக வருவாய் கிடைக்கும். மழைக்காலங்களில், இலைகள், பூக்கள் வாயிலாக வருவாய் ஈட்டலாம். கோடை காலங்களில் குச்சிகளில் வருவாய் ஈட்டலாம். மானாவாரி நிலத்தில் ஆவாரம் சாகுபடி செய்தால், நல்ல வருவாய்க்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே. ஜெயந்தி, 94425 18127.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !