கடும் சோதனையிலும் காசு பார்த்த கிருஷ்ணகிரி மா விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டத்தை 'மா மாவட்டம்' என்று சொல்வார்கள். இந்த வருடம் மா மகசூல் பொதுவாக திருப்தியாகத்தான் இருந்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு கணிசமான மகசூலினையும் லாபத்தினையும் கொடுத்துவந்த ஆல்போன்சா மிகவும் குறைந்த மகசூலினையே கொடுத்தது. இதற்கு காரணம் பனி, மழை போன்ற சூழ்நிலையே. இதனால் உற்பத்தி யில் பாதிப்பு ஏற்பட்டு நல்ல விலையே கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரியைப் பற்றி பேசும்போது அங்கு என்னவாகியிருக்கும் என ஆராயலாம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் நன்றாக இருந்தது. ஆனால் இங்கும் மழையின் பாதிப்பு கடுமையாக இருந்தது. கடும் காற்று மற்றும் ஆலங்கட்டி மழை. விவசாயிகள் முதலில் சோகத்தில் இருந்தனர். இருப்பினும் நாட்கள் தள்ளிவரும்போது நிலைமை சீர்பட்டு வருவாய் கிட்டியது. இந்த சூழ்நிலையை ஆராயலாம். கிருஷ்ண கிரியில் தோத்தாபுரி ஓரளவிற்கு நல்ல மகசூலினைக் கொடுத்தது. விவசாயிகளுக்கு தோத்தாபுரி அதன் 'பழக்கூழ்' பெருமையால் நல்லது ஏற்படவில்லை. தோத்தாபுரி பழங்களுக்கு குறிப்பிட்ட எடையும் கலரும், ருசியும் இருக்கும். பிரபல விவசாயி சாந்தகுமார் இந்த ரகத்தை டன்னிற்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரை விற்றார்.சாந்தகுமார் தான் விளைவித்த ஆல்போன்சா பழங்களை அட்டைப்பெட்டியில் பேக் செய்து ஒரு டன் பழத்தை ரூ.30,000 வரை விற்றிருக்கிறார். கிருஷ்ணகிரியில் கலர் பழம் செந்தூராவிற்கு நல்ல மதிப்பு உள்ளது. இந்த ரகத்தின் மிக சிறப்பான குணம் யாதெனில் தமிழகத்தில் முதன்முதலாக அறுவடைக்கு வரும் பழம். இந்தப் பழத்தை கையில் வைத்து பல முறை அழுத்தினால் பழம் ஓர் நீர் பந்துபோல் ஆகிவிடும். உடனே அடி பாகத்தில் துளைசெய்து வாயில் வைத்து உறிஞ்சினால் ஜுஸ் அனைத்தையும் குடித்துவிடலாம். அடுத்து கிருஷ்ணகிரி பகுதியில் பீத்தர் அல்லது நடுசாலை என்ற மா ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் பழம் நல்ல நறுமணமும் ருசியும் கொண்டுள்ளது. இவைகளும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு டன்னிற்கு ரூ.7000 வரை விலை பெற்றுத் தருகின்றது.கிருஷ்ணகிரியில் சிறந்த 'டேபிள் வெரைட்டி' பங்கனபள்ளியாகும். இந்த வருடம் இந்த ரகம் விவசாயி களுக்கு உதவி உள்ளது. இந்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு விற்கும்போது அவைகளுக்கு டன்னிற்கு விலை ரூ.10,000 வரை கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் சுவையும் மணமும் மிக்க காலப்பாடு ரகம் சாகுபடி செய்யப் படுகின்றது. இந்த ரகம் பங்கனபள்ளிக்கு ஒப்பான சுவையைப் பெற்றுள்ளது. இந்த பழங்கள் ஒரு வீட்டில் இருந்தால் வீட்டில் நுழைபவர்களுக்கு வீட்டினுள் காலப்பாடு பழங்கள் இருக்கின்றன என்று தெரிந்துவிடும். பழங்கள் நடுத்தர சைசினைக் கொண்டது. ஒவ்வொரு பழமும் சுமார் 150 கிராம் எடையைக் கொண்டது. கொட்டை சிறியதாகவும், சதைப்பற்று அதிகமாகவும்?இருக்கும். பழங்களை தோலோடு சாப்பிடலாம். இந்த பழங்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு டன்னிற்கு விலை ரூ.12 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி பகுதியில் விவசாயிகள் மல்கோவா பழங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி விற்கின்றனர். இந்த வருடம் விவசாயிகளுக்கு டன் பழங்களுக்கு விலை ரூ.15 ஆயிரம் வரை கிடைத்துள்ளது.கிருஷ்ணகிரி விவசாயிகள் பலர் பலவிதமான ஊறுகாய் ரகங்களை விற்பனை செய்கிறார்கள். இந்த ரகங்களை பொதுவாக ''நாட்டி'' வெரைட்டி என்கிறார்கள். இவைகளை விற்று இந்த வருடம் டன்னிற்கு ரூ.4,000 - 7,000 விலை பெற்றிருக்கிறார்கள். சில விவசாயிகள் புகழின் உச்சியில் இருக்கும் இமாம்பசந்த் ரகத்தினை சாகுபடி செய்துள்ளனர். இப்பழங்களை டன்னிற்கு ரூ.20,000 வரை விற்பனை செய்துள்ளார்கள். இந்த வருடம் கடும் சோதனையிலும் கிருஷ்ணகிரி விவசாயிகள் மா சாகுபடியில் ஓரளவு லாபம் எடுத்துள்ளனர் என்று பிரபல மா விவசாயி சாந்தகுமார் கூறுகிறார்.-எஸ்.எஸ்.நாகராஜன்.