கால்நடைகளின் தீவன பயிர்கள்
கால்நடைகள் வளர உதவிகரமாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அது பலவித களைச் செடிகள் வெகு ஜோராக வளரவும் காரணமாக உள்ளது. உடன் ஓடிச் சென்று களைக்கு களைக்கொல்லி தெளித்திட திட்டமிட வேண்டாம். அரும்பாடுபட்டு வளர்ந்த பலவித புல் வகைகள் பால் தரும் பசுவிற்கு உணவாகுமே. முடிந்த இடங்களில் எல்லாம் கால்நடைக்கு உதவும் புல் வகைகள் இருப்பின் அவற்றை சேகரித்து பயன்படுத்த வேண்டும். பார்த்தீனியம் போன்ற நச்சுக் களைகள் உள்ள இடத்தில் நன்கு மடக்கி உழவு செய்து ஈரம் போகும் முன்பு நிலப்போர்வை அமைத்து பயிருக்கு, அதாவது சூரிய ஒளியை அறுவடை செய்து நன்மை தரும் கொள்ளு, சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி முதலிய மண்வளம் பேணிட வேண்டும். மாற்று பயன்பாட்டுக்கு உதவும் பயிர்களை விதைத்து, களையை எடுத்து அழுத்தி உழவடை செய்ய உதவும் பேபி வீடர், பவர் வீடர், பவர் டில்லர், டிராக்டர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன் படுத்தலாம்.புரதச்சத்து மிகுந்த புல்வரப்பு ஓரங்களில் அல்லது சிறு பாத்திகளின் தீவனப் பயிர் சாகுபடிக்கு உகந்த தானிய வகைப் பயிர்களை கட்டாயம் விதைக்க வேண்டும். நீருக்கு வாய்ப்புள்ள இடங்களில் தீவனமாகப் பயன்படும் அசோலா (நீர் தேங்கி உள்ள இடம்) வளர்க்கலாம். தீவனச் சோளம், கோ 27, கோ 10, கோ.எப்.எஸ். எண் 29 (மறுதாம்பு சோளம்) பயிர் செய்து அத்துடன் தீவன தட்டைப்பயறு கோ. எப்.சி.- 8 கலந்து ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். கால்நடைகள் விரும்பி உண்ணும் தீவன மக்காச்சோளம் ஆப்ரிக்கன் நெட்டை வகை ஆகும். கோ 5 தட்டைப்பயறு உடன் சாகுபடி செய்து (3:1 என்ற விகிதத்தில்) சத்துள்ள தீவனம் பெறலாம். புல் வகைகளில் கினியாபுல், கொழுக்கட்டை புல், கம்பு ரேப்பியர், நாட்டுப்புல், நீல கொழுக்கட்டைப்புல் ஆகியன நன்மை தருபவை. குதிரை மசால், வேலி மசால், முயல் மசால், சவுண்டல் எனும் சூபாடில் தீவன தேவையை புரதத்சத்து தந்து பூர்த்தி செய்பவை. எண்ணிலடங்காத கால்நடை தீவன மரங்கள் உள்ளன. குறிப்பாக வேலியில் வளர்க்க உகந்த கல்யாண முருங்கை, வாதநாராயணன், பூவரசு, கொழப்பூவரசு, கிளைரிசிடியா, கொடுக்காயப்புள்ளி, புளி, நாவல் வேம்பு, அத்தி, மா போன்ற இலைகளை எப்போதும் கால்நடைகளுக்கு தரலாம். இவை தவிர சங்குப்பூச் செடி, கருவேல், வெள்வேல், குடைவேல் இலைகளும், அகத்தி, முருங்கை, கீரை வகைகள், முட்டைக்கோஸ், காலி பிளவர் இலைகள் தேவையான அளவு தரலாம்.- டாக்டர் பா.இளங்கோவன்துணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை, தேனி98420 07125.