உள்ளூர் செய்திகள்

களிமண் நிலத்தில் விளையும் பால் வெள்ளை நிற சுரைக்காய்

பால் வெள்ளை நிற சுரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது: மணல் கலந்த களிமண் நிலத்தில் கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளேன். ரசாயன உரங்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிட்டு, இயற்கை உரங்களை பயன்படுத்தி, விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், நாட்டு ரகத்தைச் சேர்ந்த பால் வெள்ளை நிற சுரைக்காய் சாகுபடி செய்துள்ளேன். கொடி காய்கறிகளை, எப்போதும் வயலில் சாகுபடி செய்வதை காட்டிலும், சாய்வு மற்றும் சதுரம் வடிவில் பந்தல் அமைத்து, சுரைக்காய் சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் சுரைக்காய்களில், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எளிதாக கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, பச்சை நிற சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் வெள்ளை நிற சுரைக்காயை, கிலோ 40 ரூபாய் வரை விற்கலாம். நாட்டு ரகங்களை தேர்வு செய்து, சாகுபடி செய்யும்போது அதிக வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !