உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த முன்னாள் போலீஸ்காரர் கைது

அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த முன்னாள் போலீஸ்காரர் கைது

பெங்களூரு: லோக் ஆயுக்தா எஸ்.பி., என்று கூறி, அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த, ஆயுதப்படை முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் ஊழல் அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள் மீது லோக் ஆயுக்தா சோதனை நடத்தி பணம், நகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.கடந்த சில மாதங்களாக, அரசு அதிகாரிகளின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், 'தன்னை லோக் ஆயுக்தா எஸ்.பி., என்று கூறி உள்ளார். உங்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்து உள்ளது. உங்கள் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்த உள்ளோம். உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம். அப்படி செய்யாமல் இருக்க எனக்கு பணம் வழங்க வேண்டும்' என்று கேட்டு மிரட்டி உள்ளார்.பயந்து போன அரசு அதிகாரிகள் பலர், அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி உள்ளனர். இதுபற்றி லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., பசவராஜ் மதகம் என்பவருக்கு தெரிந்தது. மர்மநபர் மீது பெங்களூரு விதான் சவுதா போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபரை தேடிவந்தனர்.இந்நிலையில் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததாக, பெலகாவி சிக்கோடி சடலகா கிராமத்தின் முருகப்பா நிங்கப்பா கும்பார், 56 என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், ஆயுதப்படை முன்னாள் போலீஸ்காரர் ஆவார். பணியில் இருக்கும் போது, பலரை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் அடிக்கடி கைது செய்யப்பட்டார். இதனால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பின்னரும், தனது கைவரிசையை தொடர்ந்து காண்பித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ