கட்டட கலையில் சிறந்து விளங்கும் 3 கோவில்கள்
-நமது நிருபர் -: கர்நாடகாவில் வரலாற்று சிறப்புமிக்க ஏராளமான கோவில்கள் உள்ளன. கட்டடக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசர்கள் என பலரது ஆட்சிக்காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. அப்படி கட்டப்பட்ட கோவில்களில் தற்போதும் கலை நயத்துடன், கம்பீரமாக காட்சி அளிக்கும் மூன்று கோவில்களை பார்க்கலாம். 1. பேலுார் சென்னகேசவா கோவில் ஹாசன் மாவட்டத்தில் பேலுார் சென்னகேசவா கோவில் உள்ளது. இது கி.பி., 1,117ம் ஆண்டில் விஷ்ணுர்த மன்னரால் கட்டப்பட்டது. பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில், 'சோப்ஸ்டோன்' எனும் மென்மையான கற்களால் கட்டப்பட்டது. செதுக்குவதற்கு எளிதாக இருந்ததால், மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செய்ய முடிந்தது. கோவிலின் அடித்தளம் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். கோவில் சுவர்களில் ராமாயணம், மஹாபாரதம் போன்ற காவியங்களில் வரும் காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலின் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம். 2. விட்டலா கோவில் விஜயநகரா மாவட்டம், ஹம்பியில் விட்டலா கோவில் உள்ளது. 16ம் நுாற்றாண்டில் கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் வளாகத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள கல் தேர் மிகவும் பிரபலமானது. இந்திய கட்டடக் கலையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். பார்ப்பதற்கு உண்மையான தேர் போன்றே காட்சி அளிக்கும். இக்கோவிலின் மகாமண்டபத்தில் உள்ள 56 துாண்களும், 'இசை துாண்கள்' என்றழைக்கப்படுகின்றன. இந்த துாண்களை கைகளால் மெதுவாக தட்டினால் ஏழு வகை வித்தியாசமான ஒலிகள் கேட்கும். 3. கோமதேஸ்வரர் சிலை ஹாசன் மாவட்டத்திலுள்ள விந்தியகிரி மலையடிவாரத்தில் சமண முனிவரான பாகுபலியின் கோமதேஸ்வரர் சிலை உள்ளது. மிக உயரமான ஒற்றைக்கல்லால் செய்யப்பட்ட சிலையாகும். கி.பி., 981ல் கங்க வம்சத்து மன்னரால் இந்த சிலை செதுக்கப்பட்டது. ஒரே பாறையில் மேலிருந்து கீழாக இந்த சிலை பிரமாண்ட உருவமாக செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹாகும்பாபிஷேகம் நடக்கும். இது , சமணர்களுக்கான முக்கிய புனித தலமாக பார்க்கப்படுகிறது.