உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மயக்க ஊசி செலுத்தப்பட்ட 8 வயது பெண் புலி

மயக்க ஊசி செலுத்தப்பட்ட 8 வயது பெண் புலி

மைசூரு: மைசூரு நஞ்சன்கூடில் சுற்றித்திரிந்த 8 வயது பெண் புலி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மைசூரு சரகூரின் பென்னேகெரே கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகரை, புலி ஒன்று தாக்கிக் கொன்றது. இதையறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், நஞ்சன்கூடின் இரகவுடனஷூந்தி கிராமத்தில் உள்ள சதீஷ் என்பவரின் பண்ணையில், நேற்று முன்தினம் புலி இருப்பதை கிராமத்தினர் பார்த்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், ட்ரோன் மூலம் புலியின் இருப்பிடத்தை உறுதி செய்தனர். புலியை பிடிக்கும் பணியில் 130க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். மகேந்திரா, ரோஹித், பீமா ஆகிய கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. ஹனுமந்த நகர் அருகே புலி செல்வதை பார்த்த வனத்துறையினர், துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த புலியை, கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட 8 வயது புலி, விவசாயியை கொன்ற புலியா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி