| ADDED : செப் 08, 2026 08:00 PM
மங்களூரு: கோவில் திருட்டு வழக்கில், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மங்களூரு போலீசார் தமிழகத்தில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி: மங்களூரின், முல்கி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவிலில், கடந்த, 2018ல் திருட்டு நடந்தது. இதுகுறித்து, முல்கி போலீசார் பல கோணங்களில், விசாரணை நடத்திய போது, கோவில் திருட்டில் நாகராஜன், 38, என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக, மூடபிதரேவின் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்தார். அவரை கண்டுபிடித்து கைது செய்து, ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரும் நாகராஜனை தொடர்ந்து தேடி வந்தனர். ஏழு ஆண்டு தேடலுக்கு பின், தமிழகத்தின் திருப்பூரில், அவர் தலைமறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர். போலீஸ் குழுவினர், திருப்பூருக்கு சென்று அங்குள்ள சாஸ்திரி தெருவில் வசித்த நாகராஜனை, நேற்றிரவு கைது செய்தனர். அவரை மங்களூருக்கு அழைத்து வந்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.