பெங்களூரு: மூளையை தின்னும் அமீபா பரவல் காரணமாக, சபரிமலைக்கு மாலை அணிந்த கர்நாடக பக்தர்கள், கேரளா செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா தாக்கி, சிலர் இறந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பம்பை நதியில் குளிக்கும் பக்தர்கள், மூக்கு, வாயை பொத்தியடி நீராடும்படி, அம்மாநில சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி உள்ளதால், கேரளாவின் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து, அங்கு செல்லத் துவங்கி உள்ளனர். இதற்கிடையில் கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, மாநில சுகாதார துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இத்தகைய அமீபா, சூடான நன்னீர் மற்றும் மண்ணில் தேங்கி நிற்கும் நீர், குளங்கள், நீச்சல் குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் காணப்படுகிறது. இந்த அமீபா, ஒருவரிடம் இருந்து ம ற்றொருவருக்கு அல்லது அசுத்தமான நீரை குடிப்பதன் மூலம் பரவாது. அமீபா என்பது நச்சுத்தன்மை வாய்ந்த நுண்ணுயிர். தண்ணீரை உட்கொள்ளும்போது, மூளையை அடைந்து அமீபிக் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, யாத்திரையின்போது தேங்கி நிற்கும் நீரில் குளிக்கும்போது, மூக்கை கிளிப்களால் மூடியோ அல்லது கைகளால் மூக்கை மூடியபடியோ நீராடலாம். இந்நோய் தாக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் காய்ச்சல், கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து விறைப்பு, குழப்பம், மனநிலையில் மாற்றம், நபரின் அசாதாரண நடத்தை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால், அவற்றை புறக்கணிக்காதீர்கள். அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு தலைமை செயலர் கடிதம்
கேரள மாநில தலைமை செயலருக்கு, கர்நாடக மாநில தலைமை செயலர் ஷாலினி எழுதியுள்ள கடிதம்: நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கர்நாடக பக்தர்களுக்கு வசதிகள், பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக்கியமான நாட்களில், கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், கர்நாடக பக்தர்களுக்கு பொருத்தமான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அத்தியாவசிய மருத்துவ உதவி, அவசரகால சேவைகள் உட்பட முக்கிய போக்குவரத்து மையங்களில் சுகாதார அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டும். கன்னடம் உட்பட பன்மொழி தொடர்பு கொண்ட உதவி மையங்கள் அல்லது தகவல் மையங்கள் நிறுவ வேண்டும். அவசர நிலை அல்லது சிறப்பு தேவைகள் ஏற்பட்டால், கர்நாடக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள, கேரளாவில் தொடர்பு மையம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு யாத்திரை காலத்திலும் கேரள அரசு வழங்கும் தொடர் ஒத்துழைப்பை, கர்நாடக அரசு மனதார பாராட்டுகிறது. உங்கள் ஆதரவுடன் இந்தாண்டு யாத்திரை சுமுகமாக நடக்கும். அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.