அதிருப்தியில் ஆனந்த்சிங் மீண்டும் காங்.,கில் ஐக்கியம்?
விஜயநகரா : விஜயநகரா மாவட்ட பா.ஜ.,வில் இருந்து, முன்னாள் அமைச்சர் ஆனந்த்சிங் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஆனந்த்சிங். 2018ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சிக்கு எதிராக, எம்.எல்.ஏ., பதவியை முதலில் ராஜினாமா செய்தார். பா.ஜ., ஆட்சியில் பல்லாரியை இரண்டாக பிரித்து விஜயநகரா மாவட்டம் உருவானதில், இவருக்கு பங்கு முக்கியமானது.கடந்த 2023 சட்டசபை தேர்தலில் ஆனந்த்சிங்கிற்கு பதிலாக, அவரது மகன் சித்தார்த் சிங்கிற்கு, பா.ஜ., மேலிடம் சீட் கொடுத்தது. ஆனால் அவர் தோற்றுப் போனார். இதையடுத்து ஆனந்த்சிங்கிற்கு கட்சியில் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.தற்போது மாவட்ட அளவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கூட, அவருக்கு அழைப்பு விடுப்பது இல்லை. மொத்தமாக கட்சியில் இருந்து அவர் புறக்கணிப்பட்டுள்ளார்.அதிருப்தியில் இருக்கும் அவர், தன் ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துகிறார். மீண்டும் காங்கிரசில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.