ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்திற்கு ஒதுக்கிய ரூ.5,000 கோடி நிலத்தை கைப்பற்றிய ஆந்திரா
- நமது நிருபர் -: பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனத்திற்கு ஒதுக்கிய, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 13,815 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம் கங்காவதி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி. ஆந்திராவின் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான பிராமணி ஸ்டீல் நிறுவனம், இரும்பு தொழிற்சாலை அமைக்க, கடந்த, 2007ம் ஆண்டு ஆந்திரா முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்., கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு பகுதியில் 13,815 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். இந்த நிலத்தில் 10,700 ஏக்கர் நிலம் இரும்பு ஆலைக்கும், 3,1155 ஏக்கர் வணிகரீதியான விமான நிலையம் அமைக்கவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2008ல் பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி, கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சிறைக்கு சென்றார். 2009ல் ராஜசேகர ரெட்டியும் மரணம் அடைந்தார். இதனால் ஒதுக்கப்பட்ட 13,815 ஏக்கர் நிலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. நிலம் ஒதுக்கிய ஒப்பந்தம், கடந்த 2013ல் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜனார்த்தன ரெட்டி தாக்கல் செய்த மனுவை, ஆந்திர உயர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு விசாரணை முடிந்தது. ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆலை அமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நிலத்தை திரும்ப பெறும் ஆந்திரா அரசின் முடிவு ஏற்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, நிலத்தை கையகப்படுத்தும் பணி துவங்கியது. ஒய்.எஸ்.ஆர்., கடப்பா மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செருகுரி உத்தரவின்படி, ஜம்மலமடுகு தாசில்தார் சீனிவாச ரெட்டி தலைமையிலான அதிகாரிகள், கடந்த 8ம் தேதியில் இருந்து நிலத்தை மீட்கும் பணியை துவக்கினர். நேற்று பணிகள் முழுமையாக முடிந்தது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 5,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2007ல் 1 ஏக்கர் நிலம் 25,000 ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.