எம்.எல்.ஏ.,க்கள் வருகை பதிவுக்கு வருகிறது பயோ மெட்ரிக் முறை
பெங்களூரு: ''சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்,'' என்று, சபாநாயகர் காதர் அறிவித்தார். சட்டசபையில் சபாநாயகர் காதர் நேற்று பேசியதாவது: சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகின்றனர். இனி வருகை பதிவில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும். காகித பயன்பாடு இல்லாத சட்டசபையை நடத்த, அரசு அனுமதி அளித்து உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி ஒதுக்கீடு குழப்பம் காரணமாக, அமல்படுத்துவதில் தாமதம் ஆனது. இவ்வாறு அவர் பேசினார். சட்டசபை நடக்கும் போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சரியான நேரத்திற்கு வருவதையும், வருகை பதிவேட்டில் குளறுபடி ஏற்படாமல் தடுப்பதும் பயோ மெட்ரிக் முறையின் முக்கிய நோக்கம். கூட்டத்தொடர் நடக்கும் போது சீக்கிரம் வரும் எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை சபையில் வாசித்து, சபாநாயகர் பாராட்டுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ம.ஜ.த., உறுப்பினர் சரணகவுடா கந்தகூர் முதல் ஆளாக வந்தும், அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் அதிருப்தி வெளிப்படுத்தினார்.