பா.ஜ., - ம.ஜ.த., தொகுதிக்கு தலா ரூ.25 கோடி ஒதுக்கீடு
ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் சித்தராமையா, பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு தலா 25 கோடி ரூபாய் ஒதுக்கி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதம்: நடப்பாண்டு 2025 - 26ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பா.ஜ., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு தலா 25 கோடி ரூபாய் சிறப்பு மானியம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பணி வாரியாக நிதி ஒதுக்கீட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் துறை வாரியான பணிகள் குறித்த விபரங்களை, நிதித்துறையிடம் ஒப்படையுங்கள். பொதுப்பணி துறையின் கீழ் சாலை, மேம்பாலப் பணிகள், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் கீழ், நகர்ப்புறப் பணிகளுக்கு 18.75 கோடி ரூபாய் வழங்கப்படும். இதற்கிடையில், சட்டசபை உறுப்பினர்கள், தங்கள் விருப்பப்படி தேர்வு செய்யக்கூடிய பிற துறைகளின் பணிகளுக்கு 6.25 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு தலா 50 கோடி ரூபாய் முதல்வர் சித்தராமையா ஒதுக்கியிருந்தார். இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., ஆகிய பிற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்படி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு 25 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார். - நமது நிருபர் -