உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மருந்து வாங்கியதில் ஊழல்; பா.ஜ., ரவி குற்றச்சாட்டு

 மருந்து வாங்கியதில் ஊழல்; பா.ஜ., ரவி குற்றச்சாட்டு

பெங்களூரு: “கர்நாடக மருத்துவம னைகளுக்கு மிக அதிகமான விலைக்கு மருந்துகள் வாங்கி பகல் கொள்ளை நடக்கிறது,” என, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி குற்றஞ்சாட்டினார். பெங்களூரின், மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: சில நாட்களுக்கு முன், அரசு சார்ந்த சிக்கமகளூரு மருத்துவமனை மற்றும் கல்லுாரிக்கு சென்றிருந்தேன். அப்போது பல கசப்பான உண்மைகள், எனக்கு தெரிந்தன. மருத்துவ கல்லுாரியில் உயிர் காக்கும் மருந்துகள் வாங்க, டெண்டர் அழைத்ததில் முறைகேடு செய்துள்ளனர். குறைவான தொகையை குறிப்பிட்டிருந்த நிறுவனங்களை தவிர்த்து, அதிகமான தொகையை நிர்ணயித்த நிறுவனங்களுக்கு, டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது. அவிஷ்கார் சர்ஜிகல் நிறுவனத்துக்கு 126 மருந்துகள், கே.இ.எம்.பி.எஸ்.,க்கு 130, நுாதன் நிறுவனத்துக்கு 26, ராஜலட்சுமி ஏஜென்சிக்கு 53, சிவா பார்மா நிறுவனத்துக்கு 26, எஸ்.எல்.ஆர்., ஏஜென்சீஸ் நிறுவனத்துக்கு 54 மருந்துகள் வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த மருத்துவமனை, சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மருத்துவ கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே வாங்கிய மருந்துகளின் விலைக்கும், இப்போது புதிதாக வாங்கும் மருந்துகளின் விலைக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. பகல் கொள்ளை நடந்துள்ளது. உதாரணமாக, 10.75 ரூபாய் மதிப்புள்ள கண் திரவ மருந்தை 116 ரூபாய்க்கு வாங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ