விஜயேந்திரா படம் இல்லாத பேனர்கள் பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி
தார்வாட்: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தின் போது, வைக்கப்பட்டிருந்த எந்த பேனர்களிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் உருவப்படம் இல்லாதது, சர்ச்சையாகி உள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவற்றை நிரப்ப வலியுறுத்தி, கடந்த, 24ம் தேதியன்று, பா.ஜ., சார்பில் தார்வாடில் போராட்டம் நடந்தது. இதற்காக தார்வாட் நகரின் ஸ்ரீநகர் சதுக்கத்தில் இருந்து ஜெயநகர் வரை வழி நெடுகிலும், 40க்கும் மேற்பட்ட இடங்களில், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பேனர்களின் மேல்புறத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நவின், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பேனர்களின் கீழ்ப்பகுதியில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் உருவப்படங்கள் பெரிதாக இருந்தன. ஆனால், எந்த பேனரிலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உருவப்படம் இல்லை. இதனால், தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட தலைவர்கள் மீது, மேலிடத்தில் புகார் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.