உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சர்வே எடுத்த அரசு ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

சர்வே எடுத்த அரசு ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஜாதிவாரி சர்வேயின்போது, இளம்பெண்ணை மொபைல் போனில் புகைப்படம் எடுத்த அரசு ஊழியர்களை தாக்கியதாக அவர் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வே நடந்து வருகிறது. பெங்களூரு ஆஸ்டின் டவுனில், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள் அபிஷேக் மற்றும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய ஊழியர்கள், ஸ்டீபன் என்பவரின் வீட்டில் சர்வே எடுக்கச் சென்றனர். இந்த சர்வேயின்போது, ஸ்டீபன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். தாயுடன் வெளியே சென்றிருந்த ஸ்டீபன் வீட்டுக்கு வந்தபோது, சர்வே குறித்து மனைவி தெரிவித்தார். அப்போது, 'என்னை அவர்களின் மொபைல் போனில் படம் பிடித்தனர்' என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்டீபன், அதே பகுதியில் சர்வே எடுத்துக் கொண்டிருந்த அபிஷேக் மற்றும் ஊழியர்களிடம், 'என் அனுமதி இல்லாமல் எப்படி மனைவியை படம் எடுக்கலாம்?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவரது தாய் கீதா மார்கரெட்டும் ஆதரவு தெரிவித்தார். அபிஷேக்கும், ஊழியர்களும் எவ்வளவோ விளக்கம் அளித்தும், ஸ்டீபன் கேட்கவில்லை. ஊழியர்களை ஆபாசமாக திட்டியதுடன், தாக்கவும் செய்தார். இது தொடர்பாக அரசு ஊழியர்கள், அசோக் நகர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ