உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறையில் பயங்கரவாதிக்கு உதவி; டாக்டர் மீது குற்றப்பத்திரிகை

 சிறையில் பயங்கரவாதிக்கு உதவி; டாக்டர் மீது குற்றப்பத்திரிகை

பெங்களூரு: குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதிக்கு உதவிய வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டாக்டர் உட்பட மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மல்லேஸ்வரத்தில், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கைதான பயங்கரவாதி நசீர், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவருக்கு மொபைல் போன் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில், சிறையின் மனநல டாக்டர் நாகராஜ், ஏ.எஸ்.ஐ., சான் பாஷா, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் ஜுனைத்தின் தாய் அனீஸ் பாத்திமா ஆகியோரை, கடந்த ஆண்டு ஜூலையில் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. விசாரணையில், நசீரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு, அவருக்கு மொபைல் போன் கொடுத்ததுடன், பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, கைதான 3 பேரும் மூளையாக செயல்பட்டதும் தெரிந்தது. விசாரணைக்கு அழைத்து செல்லும் போது நசீரை தப்பிக்க வைக்க, சான் பாஷா திட்டமிட்டிருந்ததும் அம்பலமானது. இந்நிலையில் கைதான மூன்று பேர் உட்பட ஒன்பது பேர் மீது, பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் என்.ஐ.ஏ., துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது 2வது துணை குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். பயங்கரவாதத்தில் ஈடுபட என்னென்ன திட்டம் தீட்டினர், எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ