உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் நண்பர் அறை திறப்பு

பெங்களூரு போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் நண்பர் அறை திறப்பு

பெங்களூரு: பொதுவாக போலீசாரை கண்டால், குழந்தைகள் பயப்படுவர். சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் போலீசிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று பயமுறுத்தி உணவு சாப்பிட வைப்போம். அதேவேளையில் சில சிக்கலான வழக்குகளில் சிக்கும் குழந்தைகளுக்கு, மனதினுள் அதன் தாக்கம் வடுவாக மாறியிருக்கும். இதற்கு மருந்தாக, பெங்களூரு மேற்கு பிரிவுக்கு உட்பட்ட மாகடி சாலை, விஜயநகர், கோவிந்தராஜ நகர் போலீஸ் நிலையங்களில், 'குழந்தைகள் நண்பர் அறை' திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பெங்களூரு மேற்கு பிரிவு டி.சி.பி., கிரிஷ் கூறியதாவது: இந்த அறைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி, வசதியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு, குற்றத்தடுப்பு குறித்து அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அறை உதவும். பல பள்ளிகளில் 'குட் டச் - பேட் டச்' உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு, பெண் போலீஸ் அதிகாரி விழிப்புணர்வு ஏற்படுத்துவார். 'போக்சோ' மற்றும் பிற முக்கிய வழக்குகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கவும் பயன்படுத்தப்படும். தற்போது, பெங்களூரு மேற்கு பிரிவில் உள்ள மூன்று போலீஸ் நிலையங்களில் இந்த அறைகள் துவங்கப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் நகரில் உள்ள மற்ற அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார். இந்த அறைகளில், மைசூரில் உள்ள சாமராஜேந்திரா அரசு கலைக் கல்லுாரி மற்றும் கர்நாடக சித்ரகலா பரிஷத் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்புகள், விழிப்புணர்வு படங்கள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை