உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா மேல்சபையில் அரசுக்கு பின்னடைவு

கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா மேல்சபையில் அரசுக்கு பின்னடைவு

பெங்களூரு : கர்நாடக கூட்டுறவு சங்கங்கள் மசோதா, சட்டசபையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதம் நடந்த பின், அங்கீகரிக்கப்பட்டது. இந்த திருத்த மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மேல்சபையில் நேற்று தாக்கல் செய்து, இதில் உள்ள முக்கிய அம்சங்களை விவரித்தார். மசோதாவை அங்கீகரிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார். இந்த மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தும்படி, எதிர்க்கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, திருத்த மசோதாவை ஓட்டெடுப்புக்கு விடுவதற்கு முற்பட்டார். இதற்கு அதிருப்தி தெரிவித்த அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், 'மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்க, ஓட்டெடுப்பு நடத்துவது, எதிர்க்கட்சிகளின் கவுரவத்துக்கு அழகல்ல. இது வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும். நான் விரிவாக விவரித்தும் ஓட்டெடுப்பு நடத்துவது தேவையற்றது. இதில் அரசியல் செய்வது சரியல்ல' என்றார். அப்போது மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 'ஓட்டெடுப்புக்கு விடட்டுமா, வேண்டாமா' என, கேட்டார். எதிர்க்கட்சியினர் ஓட்டெடுப்பு நடத்தும்படி கூறியதால், கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவை ஓட்டெடுப்புக்கு விட்டனர். குரல் ஓட்டெடுப்பு நடந்தது. பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 23 ஓட்டுகளும், எதிர்ப்பு தெரிவித்து 26 ஓட்டுகளும் பதிவாகின. இதனால் மசோதா தோல்வி அடைந்தது. மேல்சபையில் காங்கிரசின் வெங்கடேஷ், பிரகாஷ் ராத்தோடின் பதவி காலம் முடிந்துள்ளது. யோகேஸ்வரால் காலியான இடம், இன்னும் நிரப்பப்படவில்லை. மேல்சபையில் காங்கிரசின் பலம் குறைவாக உள்ளதால், மசோதா தோல்வி அடைந்தது. இதனால், அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை