ஊர்க்காவல் படை கமாண்டன்ட் மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
துமகூரு: பயிற்சியின்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஊர்க்காவல் படை கமாண்டன்ட் மீது, துமகூரு மாவட்ட கலெக்டரிடம், ஊர்க்காவல் படையின் ஐந்து பெண் ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர்.துமகூரு மாவட்ட ஊர்க்காவல் படையில் கமாண்டன்ட் ஆக பணியாற்றி வருபவர் ராஜேந்திரா, 50. இவர் மீது ஊர்க்காவல் படையில் பணி செய்யும் ஐந்து பெண்கள் பாலியல் புகார் கூறி உள்ளனர்.துமகூரு கலெக்டர் சுபா கல்யாண், கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை ஐ.ஜி., சிவசங்கர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் கடிதம் மூலம் புகாரும் அளித்திருக்கின்றனர்.அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் இம்மாதம் 3ம் தேதி வரை துமகூரின் கொரட்டகெரே சித்தாரபெட்டா பகுதியில், ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.அங்கு கமாண்டன்ட் ஆக இருக்கும் ராஜேந்திரா, எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பயிற்சியில் காயம் அடைந்தபோது முதலுதவி அளிப்பதாக கூறி உடல் உறுப்புகள் மீது கையை வைத்தார்.மலையேற்ற பயிற்சியின்போது மலையேற உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் தங்குவதற்கு தனி அறை கொடுத்தும், ஊர்க்காவல் படை பெண் ஊழியர்கள் தங்கும் இடத்தில் தங்கினார்.தினமும் இரவில் குடித்துவிட்டு முரட்டுதனமாக நடந்து கொண்டார். எங்களை போன்று வேறு எந்த பெண்ணும் இனி பாதிக்கப்பட கூடாது. ராஜேந்திரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.