ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக பொதுமக்கள் போராட வேண்டும் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிவுரை
தங்கவயல்: ''சமூகத்தில் எங்கும் பரவியுள்ள ஊழலுக்கு, அரசை மட்டும் குறை கூறுவது சரியல்ல. ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக பொதுமக்களும் போராட வேண்டும்,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நேற்று பாரண்டஹள்ளியில், பிரஜா தத்துவ மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவது, ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான கடமை. இன்றைய சமூகத்தில், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அரசு அலுவலகங்களை ஊழல் இல்லாமல் மாற்றுவது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்கு நமது அலட்சிய போக்கும் காரணம். எந்த அலுவலகத்தில் ஊழல் கண்டறியப்பட்டாலும், கேள்வி கேட்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், எந்த அரசு அலுவலகத்திலும் விண்ணப்பம் தாக்கல் செய்வதன் மூலம் தகவல்களை பெறலாம். அந்த தகவலின் அடிப்படையில், ஊழலுக்கு எதிராக துறைகளின் உயர் அதிகாரிகளிடம் மற்றும் லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கலாம். சீனாவில் ஊழல்வாதிகளின் எண்ணிக்கை, இந்தியாவை விட அதிகம். ஆனால், அங்கு ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அங்கு ஊழல் தொடர்கிறது. நம் நாட்டில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது கடினம். சிறைக்கு செல்பவர்கள் உற்சாகமாகி விடுகின்றனர். மகாத்மா காந்தி சிறைக்கு செல்லவில்லையா என்ற அபத்தமான வாதமும் முன்வைக்கப்படுகிறது. அரசாங்க பணிகள் நடைபெற, அடிமட்டத்திலிருந்து லஞ்சம் கொடுக்கப்பட வேண்டும். சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நாம் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று நினைக்கின்றனர். பணம் மன அமைதியை தராது. நாடு கண்ட மிகப்பெரிய ஊழல்களான, நிலக்கரி மற்றும், '2ஜி' ஊழல்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முறைகேடாக பணம் சம்பாதித்தவர்கள் எப்போதாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். அத்தாவுல்லா, விஜயராகவர் ரெட்டி, வெங்கட் கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.