நீரில் மூழ்கி நால்வர் பலி
யாத்கிர்: யாத்கிர் மாவட்டம், வடகேரா தாலுகாவின், பசவநகரா கிராமத்தில் வசித்தவர்கள் குண்டம்மா, 35, சுஜாதா, 11, சிவகாந்தா, 9. இவர்கள் மூவரும் நேற்று காலை துணி துவைக்கும் நோக்கில், கிராமத்தின் அருகில் உள்ள கல்குவாரி குளத்துக்கு வந்தனர். துணி துவைக்கும் போது, சிறுமியர் நீரில் தவறி விழுந்தனர். இதை கண்ட குண்டம்மா, சிறுமியரை காப்பாற்ற, தான் அணிந்திருந்த சேலையை கொடுத்தார். நீரில் இருந்து வெளியே வரும் அவசரத்தில், சிறுமியர் சேலையை வேகமாக இழுத்ததில், குண்டம்மாவும் நீரில் விழுந்தார். மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த வடகேரா போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மூவரின் உடல்களை வெளியே எடுத்தனர். பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலா தாலுகாவின் , வக்குந்தா கிராமத்தில் வசித்தவர் மகேஷ், 15. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், கிராமத்தின் புறநகரில் உள்ள மல்லபிரபா ஆற்றுக்கு வந்தார். வெள்ளம் பாய்ந்து செல்வதை பொருட்படுத்தாமல், நீரில் இறங்கி நீச்சலடித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.