அரசு பஸ் டிரைவரை கொன்று பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு
ஹாசன்: நில பிரச்னையில் அரசு பஸ் டிரைவரை கொன்று, பெட்ரோல் ஊற்றி உடலை எரித்த உறவினர்கள் 11 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. ஹாசன் மாவட்டம் ஆலுார் தாலுகா ராஜனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பா, 57. கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவர். இவரது மாமா பாகலையா. இவர், வீரப்பாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த நிலத்தை தன் பெயருக்கு வீரப்பா பதிவு செய்தார். இந்நிலையில் பாகலையாவின் மகள்கள் மல்லம்மா, மஹாதேவம்மா ஆகியோர், வீரப்பாவிடம் 2 ஏக்கர் நிலத்தை திரும்ப தரும்படி கேட்டனர்; அவர் மறுத்து விட்டார். இதனால் இரு குடும்பத்துக்கு சொத்து தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் நீதிமன்ற விசாரணையில் ஆஜரான பின், வீரப்பா வீடு திரும்பினார். மல்லம்மாவின் மகன்கள் ஹரிஷ், பிரகாஷ், மகாதேவம்மா மகன் மகாதேவ் உட்பட 11 பேர், வீரப்பாவை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின், அவரது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினர். பாதி எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. வீரப்பா மகன் விவேக் அளித்த புகாரில் ஆலுார் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடுகின்றனர்.