வென்லாக் மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவு துவக்கம்
மங்களூரு: அரசு சார்ந்த வென்லாக் அரசு மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில் இதய நோய்க்கான சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள அரசு வென்லாக் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை வசதி இருக்கவில்லை. ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் சூழ்நிலை இருந்தது. தற்போது வென்லாக் மருத்துவமனையில், ஐந்து கோடி ரூபாய் செலவில், இதய சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் 175 ஆண்டுகள் வரலாற்றில் இது முதன்முறை. கடந்த மாதம் 21ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் திறந்துவைத்தார். 29ல், முதல் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. சிறப்பு வல்லுநர்கள், நர்சிங் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில், 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தில், பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு திட்டத்துக்கு மட்டும், 5,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஏ.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, 30 சதவீதம் சலுகை கட்டணத்தில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. 70 சதவீதம் தொகையை செலுத்த வேண்டும். இதய வல்லுநர் நரசிம்மா பை தலைமையிலான டாக்டர்கள், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை அறுவை சிகிச்சை செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.