சமையல் விஷயத்தில் தகராறு மனைவியை கொன்ற கணவர்
ராம்நகர்: சமையல் செய்யும் விஷயத்தில், தம்பதிக்கிடையே ஏற்பட்ட மோதல், மனைவியின் கொலையில் முடிந்தது.ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகாவின் மத்திகெரே கிராமத்தில் வசிப்பவர் ரங்கையா, 70. இவரது மனைவி திம்மம்மா, 65. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். பணி நிமித்தமாக தனித்தனி இடங்களில் வசிக்கின்றனர். பெற்றோர் மட்டும் மத்திகெரேவில் வசித்து வந்தனர். நேற்று காலை 9:00 மணியளவில், உணவு சமைக்கும் விஷயத்தில், தம்பதிக்கிடையே காரசார வாக்குவாதம் நடந்தது.ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரங்கையா, கைக்கு கிடைத்த அரிவாள் மனையை எடுத்து, மனைவியின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த திம்மம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, திம்மம்மா கொலையாகி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், ரங்கையாவை பிடிக்க முயற்சித்தபோது தப்பியோடினார். இது குறித்து, மாகடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார், திம்மம்மாவின் உடலை மீட்டனர். திருப்பதிக்கு தப்பியோட முயற்சித்த ரங்கையாவை கண்டுபிடித்து, கைது செய்தனர்.