வாடிக்கையாளர்களுக்கு சுடுநீர் வழங்க யோசனை
பெங்களூரு: ''மழைக்காலத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க சுடு தண்ணீர் வழங்க வேண்டும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் கூறினார். இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது: எல்.கே.ஜி., முதல் பி.யு., இரண்டாம் ஆண்டு வரை தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளியிலிருந்து, 50 மீட்டர் சுற்றளவிற்குள் துரித உணவு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை மாணவர்கள் உண்ணக்கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே சுகாதார துறையின் முன்னுரிமை. நோய் ஏற்படுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்கள் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை, பிள்ளைகள் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துவது பெற்றோரின் கடமை. மழைக்காலத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு குடிக்க சுடு தண்ணீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.