ரூ.515 கோடி போதுமா? காங்., தலைவர் கேள்வி ஜாதிவாரி கணக்கெடுப்பு
பெங்களூரு: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 515 கோடி ரூபாய் போதுமா,'' என்று மத்திய அரசுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கிறேன். இதற்கு 515 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளனர். கர்நாடகாவில் முன்பு காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. பத்து ஆண்டுக்கு முன்பே, 168 கோடி ரூபாய் செலவு ஆனது. மத்திய அரசு தற்போது ஒதுக்கி உள்ள 515 கோடி ரூபாய், உத்தர பிரதேச மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவே போதாது.மத்திய அரசுக்கு உண்மையிலேயே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆர்வம் இருந்திருந்தால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இருப்பர். ஆனால் அதை செய்யவில்லை. இப்போது அவசரம், அவசரமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். பட்டியல் ஜாதி, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், கணக்கெடுப்பை திறம்பட செயல்படுத்த வேண்டும்.இப்போது இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பு உள்ளது. முதலில் அதை அகற்ற வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தனியார் துறையிலும் பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்தோம். மோடி அரசு அதை செயல்படுத்தட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.