சிற்பங்கள் நிறைந்த கல்லேஸ்வரா கோவில்
- நமது நிருபர் -: கர்நாடகாவில் உள்ள புராதன கோவில்கள், மன்னர் ஆட்சியின் சிறப்புக்கு சாட்சிகளாக உள்ளன. இவற்றில் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கல்லேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். நேர்த்தியான கட்டட வடிவமைப்பு கொண்டுள்ளது. தாவணகெரே மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகா அருகில் பகளி கிராமத்தில் கல்லேஸ்வரர் கோவில் உள்ளது. இது, 10ம் நுாற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. ராஷ்டிர கூடர்கள் மற்றும் சாளுக்கிய வம்சத்தினரால் கட்டப்பட்டது என வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கோவில், கோபுரம் மற்றும் சிற்பங்களை ராஷ்டிர கூடர்கள் கட்டினர். அதன்பின் ஆட்சிக்கு வந்த சாளுக்கியர்கள், பிரம்மாண்ட கல் மண்டபத்தை கட்டினர். இது, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். 50க்கும் மேற்பட்ட அலங்கார துாண்களை, இங்கு பார்க்கலாம். இந்த துாண்கள், மேற்கூரையை தாங்குகின்றன. கோவிலை சுற்றிலும் சிறிய சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன. சூரியன், நரசிம்மர் உட்பட பல்வேறு கடவுள்களின் சன்னிதிகள் உள்ளன. மூலஸ்தானம் முன்பாக நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. கல் மண்டபங்களில் பார்வதி சமேதராக சிவன் சிற்ப வடிவில் அருள் பாலிக்கிறார். விநாயகர், முருகன், விஷ்ணுவின் அனந்தசயனம், மஹிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி சிற்பங்களும் பக்தர்களை கவர்ந்திழுக்கின்றன. இயற்கை எழில் மிகுந்த, அமைதியான சூழ்நிலையில் கோவில் அமைந்துள்ளது. கல்லேஸ்வரரை தரிசனம் செய்தால் தீமைகள் நீங்கி, வாழ்க்கை வளமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். எனவே வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, சிவனை தரிசனம் செய்கின்றனர்; வேண்டுதல் வைக்கின்றனர். ஆண்டு தோறும் கோவிலில் திருவிழா நடக்கிறது. மஹா சிவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் சிற்பக்கலையை ரசிப்பதற்காகவே வெளி நாட்டவரும் வருகின்றனர். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து, 263 கி.மீ., மங்களூரில் இருந்து 279 கி.மீ., துமகூரில் இருந்து 196 கி.மீ., சித்ரதுர்காவில் இருந்து 60 கி.மீ., தொலைவில் தாவணகெரே உள்ளது. தாவணகெரேவில் இருந்து 41 கி.மீ., தொலைவில் ஹரப்பனஹள்ளி உள்ளது. இங்கிருந்து, 10 கி.மீ., தொலைவில் கல்லேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நகரின் அனைத்து இடங்களில் இருந்தும் ஹரப்பனஹள்ளிக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. ஹரப்பனஹள்ளியில் இருந்து வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.