உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குழந்தைகளை கடத்த பெண் வேடத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தவர் கைது

குழந்தைகளை கடத்த பெண் வேடத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தவர் கைது

ராய்ச்சூர்: பெண் வேடம் அணிந்து குழந்தைகளை கடத்த ரிம்ஸ் மருத்துவமனைக்கு வந்த ஒருவர் சிக்கினார். அவரை அடித்து உதைத்து போலீசில் பிரசவித்த பெண்களின் குடும்பத்தினர் ஒப்படைத்தனர்.ராய்ச்சூர் நகரில் உள்ள அரசு ரிம்ஸ் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் திருடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். பாதுகாப்பு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில், ஒரு பெண் மருத்துவமனைக்குள் நடமாடினார். பாதுகாப்பு ஊழியர்கள் உறக்கத்தில் இருப்பதை கவனித்து, நான்காவது மாடியில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்றார்.அப்போது குழந்தை பிரசவித்த பெண்ணின் குடும்பத்தினர், சத்தம் கேட்டு வார்டில் யாரோ அறிமுகம் இல்லாத பெண் இருப்பதை பார்த்து கூச்சல் போட்டனர். மற்றவர்களும் விழித்துக் கொண்டு, அந்த பெண்ணை நிறுத்தி 'யார்' என, விசாரித்தனர்.மருத்துவமனையில் தன் குடும்பத்தினர் சிகிச்சை பெற்று வருவதாக முன்னுக்கு பின் முரணாக அவர் கூறினார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, மருத்துவமனை ஊழியர்களை பிரசவித்த பெண்களின் குடும்பத்தினர் வரவழைத்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது தான், பிரசவ வார்டுக்குள் நுழைந்தது பெண்ணே அல்ல; பெண் வேடமிட்ட ஆண் என்பது தெரிந்தது.அவரை அடித்து உதைத்தனர். ராய்ச்சூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.விசாரணையில் அவரது பெயர் சரணப்பா, 32, என்பதும், குழந்தையை கடத்த வந்ததையும் ஒப்புக்கொண்டார். அவருடன் மேலும் இரண்டு கூட்டாளிகளும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர் சிக்கியது தெரிந்ததும், அவர்கள் தப்பியோடியது, விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இச்சம்பவத்துக்கு ரிம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்களின் பொறுப்பின்மையே காரணம் என, பிரசவித்த பெண்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மருத்துவனையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை