உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெலகாவியை மூன்றாக பிரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆசை

பெலகாவியை மூன்றாக பிரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆசை

பெலகாவி: ''மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவி. நிர்வாகத்தை மனதில் கொண்டு, மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். எந்த நேரத்திலும் மாவட்டம் பிரிக்கப்படலாம்,'' என, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெலகாவி, கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டமாகும்; நிர்வகிப்பது சிரமம். நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.பெலகாவி, சிக்கோடி, கோகாக் தாலுகாக்களை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பெலகாவி மாவட்டம் பிரிப்பது குறித்து, எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்.ஆனால் முழுமையான அளவில், மூன்று மாவட்டங்கள் செயல்பட வேண்டுமானால், ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். பெலகாவியை பிரித்து மூன்று மாவட்டங்கள் அறிவித்தால், எந்த பிரச்னையும் ஏற்படாது.ஜே.ஹெச்.படேல் முதல்வராக இருந்த காலத்தில், பெலகாவி மாவட்டத்தை பிரித்து, சிக்கோடி, கோகாக் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள், மகிழ்ச்சி கொண்டாடினர்; ஆனால் அந்த அறிவிப்பு ரத்தானது.மாநிலத்தின் பல்வேறு இடங்களில், 42 தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவக்கப்பட்டன. இதில் 27 பணிகள் முடிந்துள்ளன. மற்ற இடங்களிலும் தீவிரமாக நடக்கின்றன.முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனக்கு பொதுப்பணித்துறை கிடைத்தது. தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுகிறேன்.அனைத்து இடங்களிலும் தரமான சாலைகள் இருக்க வேண்டும். எங்கள் துறையின் பணிகள், மக்களின் கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் மற்ற துறைகளின் பணிகள் தென்படுவது இல்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கள் துறைக்கு தேவையான நிதியுதவியை, அரசு அளித்துள்ளது. சாலைகள் மற்றும் கட்டடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ