| ADDED : செப் 09, 2026 11:48 PM
ரூ.18,000 கோடி கர்நாடகாவில் தற்போது 101 தாலுகாக்கள் வறட்சியால் 18,000 கோடி ரூபாய்க்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யும்படி தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு இரண்டு நாட்களில் கடிதம் எழுதப்படும் என்று, துணை முதல்வர் பரமேஸ்வர் கூறியுள்ளார். ரூ.45 கோடி கர்நாடகாவில் உள்ள மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த 45 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம், அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுகள் மேம்படுத்தப்படும். பழுதடைந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதிலாக புதிதாக 100 ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சி.டி., ஸ்கேன் இயந்திரங்கள், மூளையில் ஏற்பட்ட காயத்தை கண்டறியும் கையடக்க கருவிகள் வாங்கப்படும். இதன் மூலம், அரசு மருத்துவமனைகள் புது பொலிவு பெறும். நிரந்தர தீர்வு பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தின் வடக்கு மண்டலத்தில் உள்ள பல பகுதிகளை நேற்று வாரியத் தலைவர் மஞ்சுளா பார்வையிட்டார். அப்போது அவர், பெங்களூரில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பழுதுபார்க்கும் பணிகளையும் இணையதள பக்கத்தில் சேமிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பழுதுபார்க்கும் பணிகளுக்கு தற்காலிக தீர்வின்றி, நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார். செயின் பறிப்பு பெங்களூரு ரூரல் நந்தகுடி, விஜயபுரா, ஹொஸ்கோட், தேவனஹள்ளி பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் சில நாட்களாக தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து விசாரிக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்தனர். செயின் பறிப்பில் ஈடுபடுவோர் கருப்பு நிற பல்சர் பைக்கில் வருவதை போலீசார் கண்டறிந்தனர். இவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். நிறைவு விழா காங்கிரஸ் அரசின் தோல்வி, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மாநில பா.ஜ., ராய்ச்சூரிலிருந்து, கடந்த 1ம் தேதி பாதயாத்திரை துவங்கியது. பாத யாத்திரை நிறைவு விழா இன்று பல்லாரி நகராட்சி உயர்நிலை பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நேற்று நடந்தன. பொதுக்கூட்டம் நடத்த, மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.