ஐந்து புலிகள் கொல்லப்பட்டதற்கு அதிகாரிகள் அலட்சியமே காரணம்
சாம்ராஜ்நகர்: கண்காணிப்புப் பணியில் ஈடுபடாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே, ஐந்து புலிகள் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.சாம்ராஜ்நகர், மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலயத்தில் கடந்த 26ம் தேதி தாய் புலி, நான்கு குட்டி புலிகள் என ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று வனத்துறை அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது.இதுகுறித்து விசாரிக்க கூடுதல் தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் குமார் புஷ்கர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல்கட்ட அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்:புலிகளை கொலை செய்யும் நோக்கத்துடன் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்ட மாட்டிறைச்சி, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளது.இதை சாப்பிட்டதாலே புலிகள் உயிரிழந்தன.இதை வனத்துறை உதவி பாதுகாவலர், மண்டல வன அதிகாரி, மாவட்ட வன அலுவலர் ஆகியோர் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபடவில்லை. இதனால், புலிகள் கொல்லப்பட்டுள்ளன. தங்கள் அடிப்படை பணிகளை கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர்.அதுபோல, ஒப்பந்த அடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கவில்லை. இதனால், அவர்களும் பணிகளில் அலட்சியமாக செயல்படுகின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.